ச.ம.க. அதிகாரம் முழுவதும் இவருக்குத்தான்... நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானம்!
SMK party Alliance issue
மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து, சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் சரத்குமார் தலைமையேற்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் பிரதானமாக, நாடாளுமன்ற தேர்தல் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு கொடுக்கப்படுவதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, படிப்படியாக மது விற்பனை குறைக்கப்பட்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். போதையினால் பல குற்றங்கள் ஏற்படுவதாகவும் அதனை தடுக்க தமிழகத்தில் போதை இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சென்னையில் இருந்து அருகில் உள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக பேருந்து வசதி மற்றும் ரயில் வசதிகள் முறையாக ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சி முழுமையாக வரவேற்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரை 2014-19 ஆகிய தேர்தலில் போட்டியில்லாமல் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால் 2024 ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை தேர்தலில் முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.