தஞ்சையில் கொழுந்துவிட்டு எரிந்த கஞ்சா மூட்டைகள்...! - 247 கிலோ கஞ்சாவுக்கு அதிரடியாக தீ வைப்பு...!
Bundles ganja caught fire Thanjavur 247 kg ganja set on fire flash
உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 247 கிலோ கஞ்சா மற்றும் பல்வேறு போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தீயில் எரித்து அழிக்கப்பட்டன.

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை முற்றிலுமாக ஒடுக்க காவலர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு, அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த தொடர் நடவடிக்கைகளில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், மொத்தமாக 247 கிலோ கஞ்சா மற்றும் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் செயல்பட்டு வரும் மருத்துவ கழிவுகள் அழிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் முழுமையாக தீயிட்டு அழிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் காவலர்களும் நேரில் பங்கேற்றனர்.போதைப்பொருள் ஒழிப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Bundles ganja caught fire Thanjavur 247 kg ganja set on fire flash