50% இட ஒதுக்கீடு தட்டிப் பறிப்பு..? அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயிலும் விவகாரத்திலும் தவெக அரசு மெத்தனமாக இருக்க கூடாது; சீமான்..! - Seithipunal
Seithipunal


நம்முடைய அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயில, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 50% இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

''தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, இந்திய ஒன்றிய அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNMOA) மாநிலம் முழுவதும் மிகப் பெரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தது.

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாப்பதில் அன்றைய அதிமுக அரசு காட்டிய அலட்சியம் காரணமாக, அரசு மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் (Incentive Marks) முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், அது அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான வாய்ப்பை பெற்றுத்தரவில்லை.

அதனைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு (MCI) எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மருத்துவர் பெருமக்கள் இழந்த தங்கள் உரிமையை மீண்டும் பெற்று வந்தனர்.

ஆனால், 2025 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் 151 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் கடந்த 29.5.26 அன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர் கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் தங்கள் படிப்பை முடித்த பின் ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ளனர். எனவே அரசு மரு‌த்துவ‌ர்களு‌க்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவ கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது.

அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் தற்போது சாதித்துள்ளது. ‘நீட்’ மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிப்பதென்பது மாநில உரிமையை பறிக்கும் அப்பட்டமான சூழ்ச்சியாகும்.

தமிழ்நாடு அரசு தன் வசம் உள்ள அரசு மருத்துவர்களுக்கான உயர் மருத்துவ இடங்களை தானே நிரப்பலாம் என்று உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியிருந்த நிலையிலும், ஒன்றிய அரசு இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு மூலம் மாநில இடங்களை கைப்பற்ற முயல்வது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் கொடுஞ்செயலாகும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பையும், ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவம் பெறும் உரிமையையும் நேரடியாக பாதிக்கும். மேகதாது அணைபோல, அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயிலும் விவகாரத்திலும் தவெக அரசு மெத்தனமாக இருப்பது தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்க்கும் சிறிதும் பொறுப்பற்றச் செயலாகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தியது முதலாக அதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் நீட் தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. எனவே நீட் தேர்வு மதிபெண்ணை அடிப்படையாக கொண்டு உயர் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பை பறிப்பது அரசு மருத்துவப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

ஆகவே, நம்முடைய அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயில, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 50% இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman asserts that the government must not remain complacent regarding the issue of government doctors pursuing higher medical studies


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->