அதிமுக அலுவலகத்தில் தாக்கப்பட்ட தொண்டரை, திமுகவினர் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்.! பீதியை கிளப்பும் சசிகலா.!
sasikala say about admk head office incident
அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
"அ.திமு.க. தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்திருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமை படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
என்றைக்கு நம் புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்றுமுதல் இன்று வரை நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது.
எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில் அக்கறை காட்டும் போதுதான், அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது ஒரு நல்ல எண்ணமும், நம்பிக்கையும் வரும். எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள்தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.
ஓமபொடி பிரசாத் சிங் புரட்சித்தலைவரின் அன்பைப் பெற்றவர். அதுமட்டுமல்ல பிரசாத் சிங் தலைவர் கையால் தாலி எடுத்து கொடுத்தால்தான் தனக்கு திருமணம் என்று திருமண மேடையில் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் தலைவரும் இந்த எளிய தொண்டனின் அன்பால் கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்த பின்னர் திருமணம் செய்து கொண்டவர்.
மேலும், புரட்சித்தலைவர் கட்சி தொடங்கிய சிறிது காலத்தில் மீண்டும் தி.மு.க.வோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில் இருந்த வேளையில் பிரசாத் சிங், முசிறிப்புத்தன் ஆகியோரை தி.மு.க.வினர் தாக்கியதை பார்த்தவுடன், தி.மு.க.வுடன் மீண்டும் சேர்வது என்ற முடிவை கைவிட்டு விட்டு, அ.தி.மு.க.-வை தொடர்ந்து வழி நடத்தி வெற்றிகண்டார்.
அதே போன்று, எளிய தொண்டரான பி. ராஜேஷ் இன்றைக்கு தலைமைக் கழகத்திலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இன்று, நம் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சீரழித்துவிடாதீர்கள். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது.
தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன். ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும்.
இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியத்தை உணர்ந்தாகவேண்டும்" என்று சசிகலா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
sasikala say about admk head office incident