சிறுநீர் கழிக்கவே இவ்வளவு ரூபாயா? மாநகராட்சி கழிப்பறையில் கட்டணம் கொள்ளை... ஆதாரத்துடன் வீடியோ வெளியிட அறப்போர்!
Salem Bus stand Toilet Scam arappor
சேலம் மாநகராட்சியில் இருக்கும், மத்திய பேருந்து நிலைய கழிப்பறையில் கட்டணம் கொள்ளை நடப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளது.
அதில், "79வது சுதந்திர தினம் முடிந்த நாளில் எவ்வளவு சுதந்திரமாக நிம்மதியாக நம்மால் பொது கழிப்பறையை பயன்படுத்த முடிகிறது என்று பார்த்தால் இன்று வரை போராட்டமாகவே உள்ளது. இன்றளவும் மாநகராட்சி பேருந்து நிலையங்களில் கழிப்பறைக்கு கட்டண கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கிறது.
RTI இல் பெற்ற தகவலின் படி சேலம் மாநகாரட்சி பேருந்து நிலையத்தில் 6 இடங்களில் கட்டண கழிப்பறைகள் இருப்பதாகவும், அவற்றை பராமரிக்க பொது ஏலம் ஒப்பந்த புள்ளி மூலம் திரு.எம்.சத்தியமூர்த்தி த/பெ.மணி என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒப்பந்த விதிப்படி கட்டண விபரம்: 1. சிறுநீர் கழிக்க நபர் 1 க்கு Rs.2/- 2. மலம் கழிக்க நபர் 1 க்கு Rs. 5/- 3. குளியல் - நபர் 1 க்கு Rs. 10/- பெற நிர்ணயக்கபட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தன்னார்வலர்கள் மூலம் கள ஆய்வு செய்த போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக Rs.10/- கட்டாயமாக வசூலிக்கப்பட்டதும், அதற்கு எந்த விதமான டோக்கன் / இரசீதும் வழங்குவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது சிறுநீர் கழிக்க ரூ2/- இக்கு பதில் ரூ10/- வசூலிக்கப்படுகிறது. மலம் கழிக்க ரூ5/- இக்கு பதில் ரூ10/- வசூலிக்கப்படுகிறது.
இது மிகப்பெரிய கட்டண கொள்ளை. கட்டணம் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் தெரியப்படுத்தப்படவில்லை. அதை பயன்படுத்தி கொண்டு மக்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இது உடனே நிறுத்தப்படவேண்டும். இது சம்மந்தமான புகார் கடிதம் இன்று சேலம் மாநகராட்சிக்கு அனுப்பியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Salem Bus stand Toilet Scam arappor