முதல்வர் விஜய் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு; டெல்லி தலைமைக்கு ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை..!
RB Udayakumar warns Delhi leadership that efforts are underway to make Vijay the prime ministerial candidate in the 2029 parliamentary elections
''விஜய்யின் மாய பிம்பத்தை வைத்துதான் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னெடுப்பு எடுத்து வருகிறது. டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உதயகுமார் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது;
தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்று 75 நாட்கள் கடந்துள்ளது. ஆனால், இந்த 75 நாட்களில் தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என முதல்வர் விஜய், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் அல்லது மக்களுக்காவது ஏதாவது தெரியுமா என்றால், நமக்கு சந்தேகம்தான் எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டும் விஷயங்களையாவது முதலமைச்சர் விஜய் கவனத்தில் கொள்கிறாரா என்றால் அதுவும் சந்தேகம்தான் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் நடமாட்டம், மின் வெட்டு, சிறை மரணங்கள், பயிர் கடன் தள்ளுபடி, டெல்டா மாவட்ட வறட்சி, மேகதாது அணை பிரச்சனை, இரு மொழி பிரச்சனை என உடனடியாக தீர்வு காண வேண்டிய ஆயிரம் பிரச்சனைகள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தவெகவினர் மிகவும் எதார்த்தமாக 'சிறு தவறு நடந்துவிட்டது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்' என விஜய் கட்சியினர் கடந்து சென்று விடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், முதலமைச்சர் விஜய் செய்யாததையும் செய்ததாக போலி வீடியோக்களை தயார் செய்து, தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்ஸ் வைத்துக் கொண்டு ரீல்ஸ் வெளியிட்டு விஜய் பிம்பத்தை கட்டமைப்பதைத் தவிர விஜய் அரசு இந்த 75 நாட்களாக எதுவும் செய்ததாக நமக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, விஜய்யின் மாய பிம்பத்தை வைத்துதான் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னெடுப்பு எடுத்து வருகிறதாகவும், டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
English Summary
RB Udayakumar warns Delhi leadership that efforts are underway to make Vijay the prime ministerial candidate in the 2029 parliamentary elections