புதுச்சேரியில் புதிய திருப்பம்! ஆட்சியமைக்கிறாரா ரங்கசாமி?! தமிழிசையின் முடிவு என்ன?!
Puduchery political crisis
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததையடுத்து பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது.
இந்த நிலையில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், புதிய அரசு அமையுமா? அல்லது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தபடுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் புதுச்சேரியின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரும், என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் அழைத்தால் ஆட்சி அமைப்பது குறித்து அதிமுக மற்றும் பாஜகவுடன் கலந்தாலோசித்து பேசி முடிவெடுப்போம் என அறிவித்திருக்கிறார்.
தற்போதைய புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் தகுதிநீக்கம், 5 காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஒரு திமுக உறுப்பினர் ராஜினாமா செய்ய போக மீதி 23 நேரடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மூன்று நியமன உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் படி 3 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால், தற்போது புதுச்சேரி சட்டசபையில் பலமானது 26 ஆக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆட்சி அமைக்க 14 இடங்கள் தேவை என்ற நிலையில் என்.ஆர்.காங்கிரசிடம் 7 இடங்களும், அதிமுகவிடம் 4 இடங்களும், பாஜக நியமன உறுப்பினர்கள் மூன்று பேரும் இருப்பதால் 14 இடங்களுடன் அவர்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரியவருகிறது. மறுபுறம் காங்கிரஸ் திமுக கூட்டணியில், காங்கிரஸ் 9 திமுக 2 சுயேச்சை 1 என 12 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலும் சில பேர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Puduchery political crisis