விழாக்கான ஏற்பாடு துவக்கம்...! மாமல்லபுரத்தில் நாளை மாணவர்களுக்கு வைர மோதிரம், தங்க நாணயம் வழங்கும் விழா...!
Preparations ceremony begun to present diamond rings and gold coins to students in Mamallapuram tomorrow
கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் ''விஜய்'' மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.இந்த நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நாளை காலை 9 மணி முதல் நடக்கிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி, பொதுச் செயலாளர் 'புஸ்சி ஆனந்த்' சிறப்பாக செய்து வருகிறார்.

இந்த பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளிலுள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க இருக்கின்றனர். விழாவில் சுமார் 2000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.மேலும், விழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் குளித்து விட்டு தயாராகி வருவதற்கு மாமல்லபுரத்தில் முகுந்தன் மகால் என்ற திருமண மண்டபம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தென் மாவட்டத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், நாளை தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்கப்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்புரையாற்றுகிறார்.
அடுத்ததாக தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம், கல்வி ஊக்க தொகை, விருதுகளை வழங்கி மாணவ, மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.பரிசு பெற இருக்கும் 600 மாணவ, மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்த இருக்கிறார். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருக்கிறது.
விழாவில் பங்கேற்க வரும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மேளதாளங்கள், நாட்டுப்புற கலைஞர்கள், செண்டை மேளத்துடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட இருக்கிறது.2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடக்கிறது.
English Summary
Preparations ceremony begun to present diamond rings and gold coins to students in Mamallapuram tomorrow