அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை...! அன்பில் மகேஷ் வீட்டில் சோதனைக்கு கே.என். நேரு கடும் கண்டனம்...!
Political revenge KN Nehru strongly condemns raid Anbil Mahesh house
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வரும் விசாரணையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே, அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெறும் சோதனைக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது,"தி.மு.க.வில் தீவிரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வரும் நிர்வாகிகளை குறிவைத்து, அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.
அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெறும் இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.தி.மு.க.வினரை அச்சுறுத்துவதற்காக தவெக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், எந்தவிதமான சோதனைகள் வந்தாலும் அவற்றை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கே.என். நேரு தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் மூலம் தங்களது தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபித்து வழக்கை எதிர்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.அன்பில் மகேஷை நேரில் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றபோதும், சோதனை நடைபெற்று வருவதால் அவரை சந்திக்க காவலர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றும் கே.என். நேரு தெரிவித்தார்.
முன்னதாக, அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சோதனை நடத்தி வந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கே.என். நேரு அங்கு வந்தார்.
இல்லத்தின் முன்பு ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் காத்திருந்த அவர், சோதனை காரணமாக உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து அன்பில் மகேஷை செல்போன் மூலம் தொடர்புகொண்டு கே.என். நேரு பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
English Summary
Political revenge KN Nehru strongly condemns raid Anbil Mahesh house