புதிய விமானநிலையம் வருவதை வரவேற்கிறோம்! அதே நேரத்தில்.....! என்ன சொல்ல வருகிறார் அன்புமணி! - Seithipunal
Seithipunal


சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைகிறது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விமான நிலையம் அமைவதால் பாதிக்கப்படும் பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களை சந்தித்து கருத்து கேட்பு கூட்டத்தினை நடத்தினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 'சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்துர் மற்றும் அதன் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைகிறது என தமிழக அரசு அறிவித்த நிலையில், அந்த திட்டத்தினை எதிர்த்து மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இன்று அவர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்டு அறிந்திருக்கிறோம். ஒட்டுமொத்த மக்களும் விமான நிலையம் வேண்டாம் என சொல்லியிருக்கிறார்கள். 

இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எங்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி எம்எல்ஏ அவர்களின் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினை அமைத்து, பாதிக்கப்பட்ட 12 கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள  மக்களை நேரில் சந்தித்து நீர்நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றை பார்த்து ஆய்வு செய்ய இருக்கின்றோம். பின்னர் இந்த இடத்தை அரசு தேர்வு செய்தது ஏன்? இந்த இடத்தினை தேர்வு செய்ததால், இப்பகுதி மக்களுக்கு அரசு செய்யப்போவது என்ன? போன்றவற்றை அரசிடமும் நாங்கள் பேசி தெரிந்து கொண்ட பிறகு தான் நாங்கள் முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. 

தற்பொழுது வரை அறிவிப்பாக மட்டும் தான் வந்திருக்கிறது. இதனை எப்படி செய்யப் போகிறார்கள்? முழுமையாக அரசே செய்யப் போகிறதா? அல்லது அரசு - தனியார் கூட்டாக செய்ய போகிறார்களா?. அதேபோல ஏன் இந்த பகுதியை தேர்வு செய்தார்கள் என்பதும் தெரியவில்லை? மற்ற இடங்களை ஏன் தேர்வு செய்யக்கூடாது?. நீர்நிலைகளை என்ன செய்ய இருக்கிறார்கள்? முக்கியமாக காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வடிகால் வாயிலாக அடுத்தடுத்து நீர்நிலைகளில் நீர்  கொண்டு வந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்கிறார்கள். அதனை என்ன செய்ய போகிறார்கள்? 

அதேபோல இங்கே நிலத்தை எடுத்தால், இங்கே வசிக்கும் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள்? அவர்களுடைய வாழ்வாதாரம் என்ன? வேலைவாய்ப்பு என்ன? அவர்களின் இருப்பிடம் எங்கே?  போன்ற பல கேள்விகள் இருக்கிறது. ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளை தெரிந்து கொண்ட பிறகு எங்கள் முடிவினை நாங்கள் அறிவிக்கிறோம். 

வளர்ச்சி என்பது தேவையானது. அதே சமயம் விவசாயத்தை அழித்து தான், வளர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்பதை நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம். வேளாண்துறையும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் உண்மையான வளர்ச்சி. விவசாயத்தை அழித்து கட்டுமானங்களை கொண்டு வருவது தான் வளர்ச்சி என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதே சமயம் விவசாயமும் வளர வேண்டும். 

சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், நீர் நிலைகளை காத்து, நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து, விவசாயத்தை செழிக்க வைத்துக்கொண்டே, வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் நாம் நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து, நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். உலகம் எங்கும் பருவநிலை மாற்றம் இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதனை செய்ய வேண்டியது அரசின் கடமை. 

உதாரணமாக நம் சென்னையை எடுத்துக்கொண்டால், சென்னையில் இருந்த 250 நீர் நிலைகளை தரைமட்டமாக மூடிவிட்டு, கட்டுமானங்களாக, திட்டங்களை  உருவாக்கியிருக்கிறோம். இன்று வீராணம் ஏரியிலிருந்தும், கிருஷ்ணா நதியில் இருந்தும் குடிநீருக்கான தேவையை நாம் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். அதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படாமல், அதே சமயம் வளர்ச்சிக்கான திட்டங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். 

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது நிச்சயமாக தேவை. அது தொடர்பாக நானே பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஒரு ஆண்டுக்கு, 2 கோடியே 10 லட்சம் பயனாளிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் மூன்றரை கோடி பயனாளிகள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போதுமானது இல்லை. 10 கோடி பயனாளிகள்  பயன்படும் வகையில் புதிய விமான நிலையம் வேண்டும் அப்போது தான் அடுத்த 30, 40 ஆண்டுகளை நாம் எதிர்காலத்தில் சமாளிக்க முடியும். 

சென்னைக்கு அருகிலேயே உப்பளம் போல, பல்வேறு பகுதிகளில் அரசு நிலங்களே இருக்கின்றன. அங்கெல்லாம் தேர்வு செய்யாமல் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள்? என்பது குறித்து அரசிடம் எங்கள் குழு கேட்டறிந்த பிறகு தான் தெரிய வரும். அதன் பின்னரே எங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கையை, எங்களுடைய முடிவை நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.  

நாகரிக வளர்ச்சி என்பது தேவையானது தான் அதற்காக விவசாயத்தையோ, நீர்திட்டங்களையோ, சுற்றுசூழலையோ அழித்து தான் வர வேண்டும் என்பதனை எதிர்க்க்கிறோம்.வளர்ச்சி, விவசாயம் இரண்டும் சரிசமமாக இருக்க வேண்டும். அதன்  காரணமாகத்தான் நாங்கள் எட்டு வழி சாலையை எதிர்த்து வருகிறோம். ஏனெனில் தற்போது சென்னைக்கும் சேலத்திற்கும்  மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. மூன்று நெடுஞ்சாலைகள் இருக்கும் பொழுது நான்காவதாக புதியதாக விவசாய நிலங்களை அழித்து ஒரு சாலை வேண்டாம் என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம். 

அதே போல கடலூர் மாவட்டத்தில் இருக்கும் என்எல்சியால் அந்த மாவட்ட மக்களுக்கு பயனில்லை. அங்கு நிலம் கொடுத்த மக்களுக்கும் பயனில்லை. நிலத்தடி நீரை உறிந்து, அந்த மாவட்டத்தினுடைய வேளாண்மையை அழித்து, பாலைவனம் ஆக்கிவிட்டார்கள். அங்கே நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை இல்லை, தமிழர்களுக்கும் வேலை இல்லை. ஆனாலும் எந்த அரசு வந்தாலும் நிலம் ஆக்கிரமிப்பு செய்து அவர்களுக்கு ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு வளர்ச்சி தராத ஒரு நிறுவனம் தேவையே இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை அழிக்கிறார்கள். நீர் ஆதாரங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அது போன்று இங்குள்ள மக்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான், தற்பொழுது இந்த திட்டத்திற்காகவும் 12 கிராம மக்களின் கருத்துக்களை, 12 கிராமங்களுக்கும் நேரடியாக சென்று கேட்டு அறிந்து, அதற்கேற்றார் போல நடவடிக்கை எடுப்பதற்காக தான் குழுவை அமைத்திருக்கிறோம். அந்த குழுவின் ஆய்வு அடிப்படையில் எங்கள் முடிவுகளை தெரிவிக்கின்றோம். 

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் ஹூண்டாய் நிறுவனத்திற்காக 3000 ஏக்கருக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதேபோல ஒரகடம், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் சிப்காட் அமைத்தார்கள். 20000 ஏக்கர் வரை எடுத்திருக்கிறார்கள். நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை உரிய இழப்பீடும்  கிடைக்கவில்லை. அவர்களுக்கான வேலையும் கிடைக்கவில்லை. ஏன் காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கே வேலை கிடைக்கவில்லை. 

தமிழகத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில், தனியார் நிறுவனங்களில் 80% உள்ளூர் மக்களுக்கு, தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூட சொன்னார்கள். இதனால் வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வரவில்லை.

அதேபோல இழப்பீடு என்பதில் பல்வேறு காரணிகள் இருக்கின்றது. நிலங்களினுடைய வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பு என்பது என்ற பல காரணிகள் இருக்கிறது. இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் பல மாடல்கள் முண்ணுதாரணமாக இருக்கின்றன.  

அமராவதி மாடல் போல, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் பல மாடல்கள் இருக்கின்றன. ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமராவதி அமைப்பதற்காக 70,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினார்கள். உதாரணமாக அங்கே ஒரு விவசாயிடமிருந்து குறிப்பிட்ட நிலங்களை கைப்பற்றினால், அதில் ஒரு பகுதியை கட்டுமானங்களை எல்லாம் உருவாக்கி அதில் கிடைக்கும் பயனை அந்த நில உரிமையாளருக்கு கிடைக்கும் படியாக செய்திருக்கிறார்கள். 

அதேபோல ஒரு திட்டத்தினை கொண்டுவந்தால் 10% பங்குகளை நிலம் கொடுத்த மக்களுக்கு கிடைக்கும் படி செய்திருக்கிறார்கள். பல நாடுகளில் இந்த திட்டங்கள் இருக்கிறது. அதேபோல கனடா நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்காக நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு,  20% பங்குகளை ஒதுக்குகிறார்கள். பிரேசில், கொலம்பியாவில் 50% நிலம் கொடுத்தவருக்கும் 50% அரசுக்கும் என கொடுக்கிறார்கள். அதேபோல கிடைக்கக்கூடிய லாபத்தில் மாத மாதம் ஒரு தொகையினை நிலம் கொடுத்தவர்களுடைய நேரடி வங்கி கணக்கில் செலுத்துவதற்கான திட்டங்களையும் வைத்திருக்கிறார்கள். அதாவது நிலத்திற்கான இழப்பீடைத் தாண்டி, லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும். இவையெல்லாமே எங்களை பொறுத்தவரை அடுத்தகட்டம் தான்.

அரியானா மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். எந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் நில உரிமையாளர்களுக்கு அதில் 20% பங்கு உண்டு என்ற ஒரு திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது மாத மாதம் லாபம் பகிர்வு திட்டம் சட்டமாக்கப்பட்டது. ஆனால் அது பற்றி மூச்சு பேச்சு கூட இன்றுவரை இல்லை. பல உதாரணங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லது, இந்தியா, வெளிநாடுகளிலும் இதுபோல வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கொடுப்பவர்களுக்கான நிவாரணத்திற்கான செயல் திட்டங்களை பார்த்து வருகிறோம். 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூட 15 வருடங்களாக சுங்கச்சாவடியில் வசூல் செய்து வருகிறார்கள். நிலம் கொடுத்தவர்களுக்கு மாத மாதம் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு தொகை என்று அவர்கள் வங்கி கணக்கில் செலுத்திக் கொண்டிருந்தால், அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதையெல்லாம் செய்யவில்லை என்றால் கடுமையான எதிர்ப்புகள் வரக்க்கூடும். ஏனெனில் விலைவாசி உயர்வு அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்துவிட்டது. விவசாயமும் இல்லாமல், அவர்கள் எங்கே போவார்கள்? அரசு மாத மாதம் லாப பகிர்வு போன்ற திட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் திட்டமும் வெற்றிகரமாக நிறைவடையும். நிலம் கொடுத்தவர்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும். தொழிலும் பெருகும்.

அதேபோல தமிழக அரசு, அதிமுக அரசோ, திமுக அரசோ ஒரு தொழிற்சாலையோ ஒரு வளர்ச்சித் திட்டமோ வருகிறதென்றால், மொத்தமாக நிலத்தை பிடுங்கி ஒப்படைத்து விடுகிறார்கள்.  நம் நிலத்தை கொடுக்கிறோம், தண்ணீரை கொடுக்கிறோம், மின்சாரத்தினை கொடுக்கிறோம். வரி விலக்கு அளிக்கிறோம், எல்லாத்தையும் பெற்றுக்கொண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் என அங்கிருந்து வந்து வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்கிறார்கள். நமது தமிழர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. நம்முடைய நிலங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் வளர்ச்சி அரசியல் தான் செய்து கொண்டிருக்கிறோம், அதே சமயம் அனைவரும் சமமாக வளர வேண்டும் என்பதை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்." என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK conduct meeting people opinion for Chennai new airport


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->