மக்கள் தொலைக்காட்சி மலரும் பூமி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மறைவு - அன்புமணி இராமதாஸ் இரங்கல்!
PMK Anbumani Ramadoss condolence Makkal TV seenu death
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மலரும் பூமி நிகழ்ச்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜி. சீனு, 76ஆவது அகவையில் இன்று நண்பகல் காலமானார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு தனி இடத்தை இன்றுவரை கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பது ‘மலரும் பூமி’ ஆகும். நிலத்தை செறிவூட்டுவது போல், அந்த நிகழ்ச்சியை மெருகேற்றி வழங்கியது அதன் தயாரிப்பாளர்கள்தான்.
வேளாண் துறை சார்ந்த வல்லுநர்கள் கரம் கோர்த்ததால் இந்நிகழ்ச்சி 19-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பயணித்து, உழவர்களுக்கு பலனளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மண் மனம் மாறாமல் வழங்கி, மக்கள் தொலைக்காட்சியோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக பயணித்து புத்துயிரூட்டிய பெருமை திரு. சீனு அவர்களையே சேரும்.
தோட்டக்கலைத் துறையில் துணை இயக்குநராகவும், நடுவண் அரசின் வேளாண் துறையில் பணியாற்றிய அனுபவமும் கொண்ட சீனு அவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு மக்கள் தொலைக்காட்சி குடும்பத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். மலரும் பூமி நிகழ்ச்சி தமிழக அளவில் பேசப்படுவதற்கு காரணமாக இருந்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss condolence Makkal TV seenu death