சென்னை சம்பவம்: அனைத்திற்கு ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊட்டி மத்தியக் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது என்பவர் கஞ்சா மொத்த வணிகம் செய்தததாக கைது செய்யப்பட்டிருப்பதும், அவரிடம் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக அதே ஊட்டியில் காவலர்களாக பணியாற்றி வரும் அபிசேகரன், மாயக்கண்ணன், சாந்தக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே கஞ்சா விற்பனையாளர்களாகவும் நுகர்வோராகவும் மாறியிருப்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் எந்த அளவுக்கு முதன்மைத் தொழிலாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வேலியே பயிரை மேய்வதைப் போல காவலர்களே கஞ்சா வணிகம் செய்தால் கஞ்சாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ற வினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் விடையளிக்க வேண்டும்.
இன்னொருபுறம் சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் விளையாட்டுத் திடலில் கஞ்சா பொட்டலம் கிடந்ததாகவும், அதை எடுத்து பையில் வைத்திருந்ததாகவும் அந்த மாணவர் கூறியிருக்கிறார். மாணவர்களின் கைகளில் கிடைக்கும் அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் மலிந்து கிடப்பது தான் திமுக ஆட்சியின் மகத்தான சாதனை ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கஞ்சா வணிகம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. முதலமைச்சரிடம் நான் நேரிலும், பல்லாயிரம் முறை அறிக்கை வாயிலாகவும் வலியுறுத்திய போதிலும் கஞ்சா கட்டுப்படுத்தப்படவே இல்லை. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான். மக்களைக் காப்பதற்காக அந்த மகத்தான பணியை தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் செய்து முடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin