80-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..!
PM Modi hoisted the national flag at the Red Fort in Delhi on the occasion of 80th Independence Day
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 2026-ஆண்டு சுதந்திர தின முன்னிட்டு தலைநகர் டெல்லில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள், சிவில் மற்றும் ராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
அதன் பின்னர், டெல்லி பகுதிக்கான ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு பாதுகாப்புத் துறை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்புப் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசியக் கொடியை ஏற்றும் இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு முதல்முறையாக 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று தேசியப் பாடலுக்கு மரியாதை அளித்தனர்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு கேப்டன் சோனியா சிங் சவுகான் உதவினார்.
அதன் போது 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, விமானப் படை சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் இதழ்கள் தூவப்பட்டன.
English Summary
PM Modi hoisted the national flag at the Red Fort in Delhi on the occasion of 80th Independence Day