என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்; தமிழரான உ.பி. ஐபிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு..!
Tamil UP IPS officer gets Presidential Award
நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரை நிகழ்த்தினார்.
இந்த 2026- ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, உத்தரப்பிரதேசத்தின் ஐபிஎஸ் அதிகாரி தமிழரான ஜி.முனிராஜிக்கு இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவர் பதக்க விருது வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஐல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்படுகிறது. அதாவது மாநிலங்களால் பரிந்துரைக்கப்படும் இந்த விருதினை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அங்கீகரித்து தேர்வு செய்வார். காவல்துறையில் வீர, தீர செயல்களுக்கான விருது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த விருது உயிரைப் பணயம் வைத்து நடத்தப்படும் முக்கியமான என்கவுன்ட்டர்களுக்கு மட்டுமானது.

இந்த வீர, தீர செயல்களுக்கான விருதுகள் இந்த வருடம் உபி-யின் 02 அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளில் ஒருவராக தமிழரான ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ் இடம் பெற்றுள்ளார். இந்த பதக்க விருதுகள் விரைவில் டெல்லியில் நடைபெறும் விழாவில், குடியரசு தலைவர் வழங்கி கௌரவிப்பார்.
கடந்த 2017-இல் உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்த பின் முதல் என்கவுன்ட்டர் நடத்தியவர் தமிழர் முனிராஜ். தொடர்ந்து தாம் பணியாற்றிய புலந்தஷெஹர், பரேலி, காஜியாபாத், அலிகர் மற்றும் ஆக்ராவில் பல என்கவுன்ட்டர்களை நடத்தி பல முக்கியக் குற்றவாளிகள் பிடித்துள்ளார். இவர்களில் 14 முக்கியக் குற்றவாளிகள் உயிரிழந்தனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் அவர் 'உபி சிங்கம்' என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது, முரதாபாத் டிஐஜியான முனிராஜ் பெற்ற விருது ஆக்ராவின் எஸ்எஸ்பியாக இருந்தபோது நடத்திய என்கவுன்ட்டருக்காகக் கிடைத்துள்ளது. அத்துடன், இவர் கொடூர ஆள் கடத்தல் கும்பலின் இரண்டு முக்கியக் குற்றவாளிகளான பதன்சிங், அக் ஷய் சிங் ஆகியோரை என்கவுண்டர் செய்ததற்காக வழங்கப்படுகிறது. 2021-இல் ஆக்ராவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் உமாகாந்த் குப்தாவைக் கடத்தி ரூ.5 கோடி பிணைத் தொகை கேட்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் எல்லையில் வனப்பகுதியில் மருத்துவரை பாதுகாப்பாக மீட்டு, இருவரை முனிராஜ் என்கவுன்ட்டர் செய்திருந்தார். மேலும், கடந்த 2009-ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த முனிராஜ் உபி மாநிலப் பிரிவு அதிகாரி. தர்மபுரியின் பாப்பாரப்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி ஆவார்.
English Summary
Tamil UP IPS officer gets Presidential Award