80வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி, உரையாற்றிய முதல்வர் விஜய்..!
CM Vijay hoisted the national flag at the ramparts of Fort St George in Chennai on the 80th Independence Day
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.
முன்னதாக, காவல் வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். அவரை தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து, முப்படை உயர் அதிகாரிகளை முதல்வர் விஜய்க்கு, தலைமச் செயலர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதன்பின்னர், முதல்வர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பை பார்வையிட்ட முதல்வர் விஜய், சுதந்திர தின விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள சபாநாயகர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார்.
இதனையடுத்து, கோட்டை கொத்தளத்துக்குச் சென்ற முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்த விழாவில், முதல்வர் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர், அவரது சில உறவினர்களுடன் நடிகை த்ரிஷா, அவரது தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் சிறப்புரையாற்றியபோது கூறியதாவது;
''அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள். தங்கள் உயிரை, உடமை, வாழ்க்கையை இழந்து நமக்காக சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், இதில் பிரபலமானவர்கள், பெயர் தெரியாதவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது வீர வணக்கங்கள்.
நாம் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் வந்தாலே மக்களிடையே ஒரு ஒற்றுமை வந்துவிடும். எல்லோரும் ஒரே மாதிரியாக யோசித்து ஒன்று சேர ஆரம்பிப்பார்கள். அப்படி ஒன்று சேரக்கூடிய இடத்தில்தான் சாதி உடையும், மதம் உடையும், மொழி, இனம் என எல்லாமே உடைந்து நொருங்கும்.

அப்படி உடைந்து நொருங்கக்கூடிய இடத்தில் இருந்து கிடைப்பதுதான் உண்மையான சுதந்திரம். அப்படித்தான் நமது மகாத்மா காந்தி தலைமையில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இன்று நாம் அந்த சுதந்திரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு படிப்படியாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றத்தை நாம் அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமையும்கூட.
நமது தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்குச் சமமான ஒரு விஷயம்தான். அதை நோக்கித்தான் நமது அரசு செயல்பட்டு வருகிறது.

386 ஆண்டு பழமையான இந்த கோட்டையில், இந்த 80-வது சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றவும், உங்கள் மத்தியில் உரையாற்றவும் எனக்கு நீங்கள் வாய்ப்பை அளித்திருக்கிறீர்கள். அதற்காக, உலகம் முழுவதும் உள்ள எனது தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களும், ஜென்சி இளம் சிங்கப்படை தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் தமிழ்நாட்டை லஞ்சம் லாவண்யம் அற்ற, போதைப் பொருள் கலாச்சாரம் இல்லாத, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி அடிப்படையில் வெளிப்படையான, நேர்மையான, உண்மையான நிர்வாகத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம்.

பொதுவாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது. மக்கள் நலன்தான் மிக மிக முக்கியம். அந்த அடிப்படையில்தான் தவெக அரசு செயல்பட்டு வருகிறது. அதே அடிப்படையில்தான் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் நாம் மத்திய அரசோடு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போடு இருக்கிறோம். அதே நேரத்தில் தமிழ்நாடு நலன் சார்ந்த விஷயங்களில் மாநில அரசுக்கு எதிரான மத்திய அரசின் முடிவுகளை தவெக அரசு எப்போதும் எதிர்க்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
முந்தைய ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை நமது அரசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணத்துக்கு அம்மா உணவகம் திட்டம். இந்த திட்டத்தை நாம் இன்னும் மெருகேற்றி வருகிறோம் என்றும், இன்னும் தவெக ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் இடையே உரையாற்றினார்.
English Summary
CM Vijay hoisted the national flag at the ramparts of Fort St George in Chennai on the 80th Independence Day