மக்கள் பயன்படுத்துவதில்லை...! ரேஷன் அரிசி பற்றி அமைச்சர் பேச்சால் அவையில் சலசலப்பு...!
People dont use it Minister speech about ration rice causes uproar House
தமிழக சட்டசபையில் ரேஷன் அரிசி தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.சட்டசபை அலுவல்கள் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கின. கூட்டம் தொடங்கியதும் நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கேள்வி நேரம் நடைபெறவில்லை.
இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.பின்னர் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.தொடர்ந்து பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்களது ஆட்சிக் காலத்தில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நெல் மழையில் நனைந்து வீணாகாமல், முளைப்பு ஏற்படாமல் பாதுகாத்ததுடன், நல்ல தரமான வெள்ளை அரிசி மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்றும், சிலர் அதனை ஆடு மற்றும் கோழிகளுக்கே பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.அமைச்சரின் இந்த கருத்துக்கு தி.மு.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சியினர் குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையிலேயே தான் அதற்கு பதிலளித்ததாக தெரிவித்தார்.தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி குறைவாக இருப்பதால், தேவையான அளவு நெல் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்திலேயே சன்ன ரக நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை முதலமைச்சர் உயர்த்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பயன்படுத்துவதில்லை என்பதே தனது கருத்து என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.அமைச்சரின் இந்த கருத்து சட்டசபையில் எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
English Summary
People dont use it Minister speech about ration rice causes uproar House