அனைவரும்‌ சமமாக பயனடைய வேண்டும்‌.. முதல்வர் முக ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


விலை ஏற்றத்தால் அதிக பயனடைபவர்கள் இடைத்தரகர்கள் மட்டுமே. இலாபமோ, இழப்போ அவர்களுக்குரிய தொகை கிடைத்து விடுகிறது. உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் என அனைவரும் சமமாக பயனடைய காய்கறி சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோருக்கு தரமான பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌ நியாயமான விலையில்‌ கிடைக்கப்‌ பெறுவதையும்‌, விவசாயிகளின்‌ விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்‌ பெறுவதையும்‌ உறுதி செய்ய வேண்டிய கடமையும்‌, பொறுப்பும்‌ மாநில அரசிற்கு உண்டு. ஆனால்‌, கடந்த ஏழு மாத கால தி.மு.க. ஆட்சியில்‌ இதற்கு நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது என்பதைத்‌ தான்‌ ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன.

கடந்த ஏழு மாத கால தி.மு.க. ஆட்சியில்‌ காய்கறிகளின்‌ விலை ஏறிக்‌ கொண்டே செல்கிறது. இந்தக்‌ காய்கறிகளை விளைவிப்பவர்கள்‌ விவசாயிகள்‌. அப்படியென்றால்‌, காய்கறிகளின்‌ விலை உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத்‌ தருணத்தில்‌ விவசாயிகள்‌ பெரிய அளவில்‌ பயனடைந்து இருக்க வேண்டும்‌. ஆனால்‌, விவசாயிகள்‌ பெரிய அளவில்‌ பயனடையவில்லை என்பதுதான்‌ யதார்த்தம்‌. 

தக்காளியை எடுத்துக்‌ கொண்டால்‌, அது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌ போன்ற மாவட்டங்களில்‌ தான்‌ அதிகமாக விளைகிறது. கிருஷ்ணகிரியில்‌ உள்ள பண்ணைவாசலில்‌ ஒரு கிலோ தக்காளி சராசரியாக 30 ரூபாய்‌ என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே தக்காளி கோயம்பேடு சந்தையில்‌ அதிகபட்சமாக 45 ரூபாய்க்கும்‌, வெளிச்சந்தையில்‌ அதிகபட்சமாக 60 முதல்‌ 65 ரூபாய்க்கும்‌ விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ போன்ற மாவட்டங்களில்‌ முருங்கைக்காய்‌ அதிகமாக விளைகிறது. திருப்பூர்‌ பண்ணைவாசலில்‌ 100 ரூபாய்‌ முதல்‌ 150 ரூபாய்‌ வரை விற்பனை செய்யப்படும்‌ முருங்கைக்காய்‌ கோயம்பேடு சந்தையில்‌ அதிகபட்சமாக 220 ரூபாய்க்கும்‌, வெளிச்‌ சந்தையில்‌ அதிகபட்சமாக 430 ரூபாய்க்கும்‌ விற்பனை செய்யப்படுகிறது. அரியலூர்‌ பண்ணைவாசலில்‌ ஒரு கிலோ 54 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்‌ வெண்டைக்காய்‌, கோயம்பேடு சந்தையில்‌ அதிகபட்சமாக 100 ரூபாய்க்கும்‌, வெளிச்‌ சந்தையில்‌ அதிகபட்சமாக 140 ரூபாய்க்கும்‌ விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, பண்ணைவாசலில்‌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்‌ கத்தரிக்காய்‌, கோயம்பேடு சந்தையில்‌ 50 ரூபாய்க்கும்‌, "வெளிச்சந்தையில்‌ அதிகபட்சமாக 120 ரூபாய்க்கும்‌ விற்பனை செய்யப்படுகிறது. இடத்திற்குத்‌ தகுந்தாற்போல்‌ வெளிச்சந்தையில்‌ விலை குறையவும்‌, அதிகரிக்கவும்‌ வாய்ப்பு இருக்கிறது. இதிலிருந்து, உற்பத்தி செய்யுமிடத்திற்கும்‌, வெளிச்‌ சந்தைக்குமான விலை வித்தியாசம்‌ என்பது இரண்டு மடங்கு முதல்‌ மூன்று மடங்கு வரை அதிகமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

தக்காளி விலை ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட போதே, விவசாயிகளுக்கு 40 ரூபாய்தான்‌ கிடைத்தது என்றும்‌, விலை ஏற்றத்தினால்‌ பெரிய பலன்‌ ஏதும்‌ விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும்‌ கூறப்படுகிறது. நுகர்வோர்களும்‌ விலை ஏற்றத்தினால்‌ கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்‌. வெளிச்‌ சந்தையில்‌ காய்கறிகளை விற்பனை - செய்பவர்களின்‌ இலாபம்‌ என்பது விற்பனையைப்‌ பொறுத்தே அமைந்துள்ளது. ஆனால்‌, இந்த விலையேற்றத்தினால்‌ அதிக பயனடைபவர்கள்‌ இடைத்தரகர்கள்‌ மட்டும்தான்‌.  இலாபமோ, இழப்போ, அவர்களுக்குரிய தொகை கிடைத்துவிடுகிறது. இதற்குக்‌ காரணம்‌ காய்கறிச்‌ சந்தையை முறைப்படுத்தும்‌ அமைப்பு அரசாங்கத்திடம்‌ இல்லாதது தான்‌. ஒரு தொழில்‌ என்றால்‌ அந்தத்‌ தொழிலில்‌ எடுபட்டிருக்கும்‌ உற்பத்தியாளர்கள்‌, மொத்த விற்பனையாளர்கள்‌, சில்லரை விற்பனையாளர்கள்‌, நுகர்வோர்கள்‌ என அனைவரும்‌ சமமாக பயனடைய வேண்டும்‌. இதனையும்‌, தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினையும்‌ கருத்தில்‌ கொண்டு, காய்கறிச்‌ சந்தையை முறைப்படுத்தும்‌ நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops statement on dec 24


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->