"தோல்வி என்பது நமக்கு இல்லை, வெற்றி ஒன்றே எல்லை!" - தவெக ஆட்சியை விமர்சித்து சீமான் ஆவேச உரை!
ntk Seeman Fiery Post Election Speech Critiques tvk CM Vijay
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகள் முடிந்து, 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசியல் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேடைப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒட்டுமொத்தமாகச் சுமார் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்த நிலையில், சென்னை மறைமலைநகரில் நேற்று நடைபெற்ற கட்சியின் அவசரத் தொண்டர்கள் கூட்டத்தில் சீமான் ஆவேசமாக உரையாற்றினார்.
தேர்தல் பின்னடைவு குறித்துச் சீமான் பகிர்ந்த முக்கியக் கருத்துக்கள்:
மக்களின் அரசியல் பார்வை: சமூகத்தில் உண்மைகளைப் பேசாதவர்களை மக்கள் தற்போதும் கொண்டாடி வருவதாகவும், ஆனால் மக்களுக்காகவே களத்தில் நின்று உண்மைகளைப் பேசுபவர்களைத் தூக்கி எறிந்துவிடுவதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதிகாரத்தின் நிலையற்ற தன்மை: எளிதில் கிடைக்கும் எந்தவொரு பொருளுக்கும் எப்போதுமே மதிப்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், "அதிகாரம் என்பது தற்காலிகமாக மிகவும் வலிமையானதாகத் தோன்றினாலும், அது யாருக்கும் எப்போதுமே நிலையானது அல்ல" எனத் தவெக அரசை மறைமுகமாகச் சாடினார்.
பின்னடைவு ஒரு தந்திரோபாய நகர்வே: "வாழ்க்கையில் 7 அடி நீளம் முன்னோக்கித் தாண்ட வேண்டுமானால், முதலில் 70 அடி பின்னே போக வேண்டும். மாபெரும் வெற்றிகளைப் பெற சில நேரங்களில் நாம் பின்வாங்கிப் பொறுமையாகக் காத்திருப்பது அவசியமாகும்" என்று தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தார்.
சட்டமன்ற நுழைவு குறித்த நையாண்டி: "நல்ல வேலை என்னை இந்தத் தேர்தலில் தோற்கடித்துச் சட்டமன்றம் செல்லவிடாமல் தடுத்தீர்கள். நான் மட்டும் ஒருவேளை உள்ளே சென்றிருந்தால், அங்கே எல்லோரும் வெளியேதான் இருந்திருப்பார்கள்" என்று தனது வழக்கமான பாணியில் நையாண்டி செய்தார்.
முதலமைச்சர் விஜய் மீதான நேரடி விமர்சனம்:
புதிய தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநில நிதிநிலை குறித்துப் பேசிய சீமான், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன பிறகுதான், தற்போதைய அரசுக்கு மாநிலத்தில் எவ்வளவு கடன் சுமை நிலுவையில் இருக்கிறது என்பதே முழுமையாகத் தெரிகிறது. உங்க தேர்தல் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கன்னு பாக்குறேன். ஈரானை போரிட்டு கைப்பற்றினால்தான் தவெக அரசால் 6 சிலிண்டர்களை தரமுடியும்” எனத் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இறுதியாக, கட்சியின் கொள்கைகளை மக்கள் ஆழமாகப் புரிந்துகொள்ளும் காலம் வரும் என்றும், அப்போது எதிர்காலத்தில் மக்கள் தங்களைத் தேடித் தேடி வருவார்கள் என்றும் உறுதியளித்தார். மேலும், "தோல்வி என்பது நமக்கு என்றுமே இல்லை; வெற்றி ஒன்றே நமக்கு எல்லை" என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.
English Summary
ntk Seeman Fiery Post Election Speech Critiques tvk CM Vijay