நீட் தேர்வால் மேலும் ஒரு பலி., வேதனையில் மருத்துவர் இராமதாஸ்.!
neet exam issue one more dead in near chennai
தமிழகத்தில் இன்று நீட் தேர்வால் இன்னொரு மாணவர் தற்கொலை: மாணவர்கள் நலன் காக்க அரசும் ஆளுனரும் விரைந்து செயல்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது,
"சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்த சுஜித் என்ற மாணவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்ற கவலையில் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிகிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் நடப்பாண்டில் தற்கொலை செய்து கொண்ட ஏழாவது மாணவர் சுஜித் ஆவார். மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.
மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு. ஆனால், அதற்கான தமிழக அரசின் சட்டத்திற்கு இன்னும் ஆளுனரின் ஒப்புதல் கூட பெறப்படவில்லை. இந்த நிச்சயமற்ற நிலை நீடிக்கக் கூடாது.
இன்னும் சில மாதங்களில் அடுத்தக் கல்வியாண்டு தொடங்கப் போகிறது. அதற்குள்ளாக நீட் விலக்கு பெற்றாக வேண்டும். அதற்கான சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்!" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
neet exam issue one more dead in near chennai