இயற்கை வளங்கள் மக்களின் பொதுச்சொத்து...! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Natural resources common property people Communist Party of India
மாநிலங்களின் உரிமைகளையும், இயற்கை வளங்கள் மீதான அதிகாரத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பெருநிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026-ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"மாநிலங்களின் உரிமைகளை படிப்படியாக பறித்து, நாட்டின் இயற்கை வளங்களை பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த சட்டத்திருத்தம் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள வரி, கட்டணம் மற்றும் பிற வருவாய் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மாநிலங்களின் முக்கியமான வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், அவற்றின் நிதி சுயாட்சியும் பலவீனமடையும் அபாயம் உள்ளது. மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாகவே இந்த சட்டத்திருத்தம் பார்க்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் கனிம வளங்கள் பெருநிறுவனங்களின் லாபத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டியவை அல்ல. அவை மக்களின் பொதுச்சொத்து என்பதால், அவற்றை பயன்படுத்துவதில் மக்கள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் உரிமைகள் மற்றும் மாநிலங்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மையப்படுத்தும் முயற்சியாக இந்த சட்டத்திருத்தம் அமைந்துள்ளதாகவும், இதன் மூலம் பெருநிறுவனங்களுக்கு கனிம வளங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கனிம வளங்கள் நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டின் வருவாயிலும் இந்த சட்டத்திருத்தம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் இயற்கை வளங்கள் குறித்து கொள்கை முடிவுகளை எடுக்கும் உரிமை, கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை மாநில மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் அதிகாரம் ஆகியவை பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சுரங்கத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பழங்குடியினர் மற்றும் தலைமுறை தலைமுறையாக வனப்பகுதிகளில் வசித்து வரும் மக்களின் நிலம், வாழ்வாதாரம் மற்றும் பாரம்பரிய உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன உரிமைச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் மற்றும் சமூக உரிமைகள், கிராமசபையின் ஒப்புதல் மற்றும் உள்ளூர் மக்களின் பங்கேற்பு ஆகியவற்றை உறுதி செய்யாமல் சுரங்கத் திட்டங்களுக்கு வழிவகுப்பது, பழங்குடியினர் மற்றும் வனவாழ் மக்களின் சட்டரீதியான உரிமைகளுக்கு எதிரானது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.மாநிலங்களின் அதிகாரம், நிதி சுயாட்சி, இயற்கை வளங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க மத்திய அரசு இந்த சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசும் இந்த சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்து, மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026-ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Natural resources common property people Communist Party of India