விஜய் அரசை கடுமையாக விமர்சித்த முரசொலி!சுதந்திர தினத்தில் திரிஷா.. சகிக்க முடியவில்லை!சரமாரி குற்றச்சாட்டு!
Murasoli harshly criticizes Vijay Trisha on Independence Day Unbearable A barrage of accusations
தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து, விஜய் அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து அந்தத் தலையங்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய், நடிகை ஒருவரை முன்வரிசையில் அமர வைத்து அவருடன் மாறி மாறி சல்யூட் செய்த காட்சியை சுட்டிக்காட்டியுள்ள முரசொலி, இந்த நிகழ்வு விஜய்யை ஆதரித்து வாக்களித்தவர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளது.
மேலும், கொடியேற்றிய பின்னர் விஜய் ஆற்றிய உரையில், மக்கள் தேர்தலுக்குப் பிறகு தன்னை விட்டு விலகாமல் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை குறிப்பிட்டுள்ள முரசொலி, இதற்கு ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள், மாணவர் அமுதன் உயிரிழந்த விவகாரம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தபோதிலும், அவர்கள் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முரசொலி விமர்சித்துள்ளது. குறிப்பாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் குறித்த புகார், அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்டவற்றையும் அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும், விஜய்யின் படங்களை தயாரித்தவர்களுக்கு அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முரசொலி குறிப்பிட்டுள்ளது. இதனை விமர்சித்துள்ள அந்த நாளிதழ், தேர்தலுக்கு முன்பு ஆதரவளித்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
போதைப்பொருள் நடமாட்டம், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளையும் முரசொலி தனது தலையங்கத்தில் எழுப்பியுள்ளது. விஜய்யின் தனிப்பட்ட புகழை மட்டுமே வைத்து மக்கள் அரசின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் விஜய் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருவதாகவும், தேர்தலில் தங்களுக்கு வாக்களித்ததாகவும் தற்போது அதற்காக வருத்தப்படுவதாகவும் சிலர் பதிவிடும் வீடியோக்கள் பரவி வருவதாகவும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாகவே முதல்வர் விஜய், “என்னோடு இருங்கள், விலகிச் செல்லாதீர்கள்” என்று மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அந்தத் தலையங்கம் விமர்சித்துள்ளது.
“மக்கள் ஏமாளிகள் அல்ல; விஜய் இன்னமும் தனிமைப்படுத்தப்படுவார்” என்ற கடுமையான அரசியல் விமர்சனத்துடன் முரசொலி தலையங்கம் நிறைவடைந்துள்ளது.
இந்த தலையங்கத்தின் மூலம் திமுகவும் தவெக அரசும் இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், விஜய் அரசின் 100 நாள் ஆட்சியை முன்வைத்து இரு தரப்புக்கும் இடையிலான விமர்சனப் போர் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Murasoli harshly criticizes Vijay Trisha on Independence Day Unbearable A barrage of accusations