சென்னை மாநகரப் பேருந்துகளில் 1,797 நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்? தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) காலியாக உள்ள நடத்துநர் பணியிடங்களை நிரப்பும் விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் தொழிற்சங்க வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக, வெளிமுகமை மூலம் 1,797 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

சென்னை மாநகரப் பேருந்துகளில் நிலவும் நடத்துநர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் வெளிமுகமை மூலம் பணியாளர்களை தேர்வு செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘எம்/எஸ். எஸ் எஸ் எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் விலைப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (GST) உட்பட ரூ.61.56 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள பல்வேறு மண்டல பணிமனைகளில் தினசரி அடிப்படையில் 1,797 பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அடையாறு மண்டலத்திற்கு 350 பணியாளர்களும், குரோம்பேட்டை மண்டலத்திற்கு 320 பேரும், வடபழனி மண்டலத்திற்கு 295 பேரும், அயனாவரம் மண்டலத்திற்கு 256 பேரும் தேவை என பணியாளர் ஒதுக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு பணியாளருக்கான அடிப்படை தொகையாக ரூ.27,679 நிர்ணயிக்கப்பட்டு, அதனுடன் 18 சதவீத ஜிஎஸ்டியும் சேர்த்து நிறுவனம் சார்பில் தொகை பெறும் வகையில் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், நிரந்தர பணியிடங்களை நிரப்பாமல் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பது ஏன் என்றும் தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேலும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதால், தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பயணம் செய்கின்றனர். பேருந்து வழித்தடங்கள், நிறுத்தங்களின் பெயர்கள், பயணிகளுடன் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றில் தமிழ் மொழி அறிவு முக்கியமானதாக இருப்பதால், வெளிமுகமை மூலம் வெளிமாநில நிறுவனங்களிடம் இருந்து பணியாளர்களை நியமிப்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால், ஒப்பந்த அடிப்படையிலான இந்த நியமன நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், வெளிமுகமை முறையை கைவிட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளிப்படையான முறையில் நிரந்தர நடத்துநர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கையை முன்வைத்து சென்னை மாநகரில் உள்ள முக்கிய பணிமனைகள் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 1,797 நடத்துநர்கள் நியமனம் தொடர்பான இந்த விவகாரம், வேலைவாய்ப்பு, ஒப்பந்தப் பணியாளர் முறை மற்றும் வெளிமாநில நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதால், தமிழக அரசுக்கு புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1797 conductors to be appointed on a contract basis in Chennai city buses Trade unions strongly oppose the move


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->