அடுத்த கால் நூற்றாண்டிற்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான்..!! அமைச்சர் மெய்யநாதன் நம்பிக்கை..!!
Minister Meyyanathan hopes DMK rule in TN for the next 25 years
புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த ஆலங்குடி அருகே உள்ள கரும்பியான் கோட்டை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அப்பொழுது கிராம மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் "ஆலங்குடி பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் கூட சீரமைக்கப்படவில்லை. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அரசு பள்ளி கட்டிடங்களை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று கரும்பியான் கோட்டை கிராமத்தில் இரண்டு பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்று உள்ளது.
பத்தாண்டு கால அதிமுக அரசு தமிழக அரசின் கஜானாவை காலி செய்து கொரோனா பெருந்தொற்றால் நிதிநிலை மோசமாகி 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கடித்து விட்டு சென்றுள்ளது. அதனை தற்போதைய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மீட்டெடுத்து வருகிறார். இதனால் தமிழக முழுவதும் திமுகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. அடுத்த கால் நூற்றாண்டிற்கு தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் திமுக அமர்ந்திருக்கும். தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் தான் தொடர்ந்து பதவி வகிப்பார்" என அமைச்சர் மெய்யநாதன் நம்பிக்கையுடன் பேசி உள்ளார்.
English Summary
Minister Meyyanathan hopes DMK rule in TN for the next 25 years