ஊத்திக்கொடுத்த தினகரன் பேட்டிக்கு, விளக்கத்துடன் வருத்தம் தெரிவித்த அமைச்சர் சிவி சண்முகம்!
MInister CV Shanumugam say sorry for his controversy speech
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலையான நிலையில், கடந்த 8ஆம் தேதி தமிழகம் திரும்பினார். தற்போது சசிகலா சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கி உள்ளார். சசிகலா வருகையால் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. ஆனால், டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள 100% வாய்ப்பு இல்லை என அதிமுக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 11 ) விழுப்புரத்தில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தினகரனையும், சசிகலாவையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம். கூவத்தூரில் ஊத்திக்கொடுத்து குடியைக் கெடுத்தவர் டிடிவி தினகரன். அவரிடமிருந்து சசிகலா தப்பித்துக் கொள்ள வேண்டும். சசிகலாவிற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். அந்த குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தினகரன் அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், "நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்!" என கூறியுள்ளார்.
அதேசமயம் அமைச்சரின் பேச்சு சாதி ரீதியாக இருப்பதாக கூறி, தினகரன், சசிகலா சாதியினை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். "நான் எந்த ஒரு குலத்தையும் தவறாக பேசவில்லை. தினகரனையும் அவரது குடும்பத்தையும் தான் பேசியிருந்தேன். ஒருவேளை எனது கருத்து அந்த சமூகத்தினரை புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
English Summary
MInister CV Shanumugam say sorry for his controversy speech