கூட்டாட்சி நாடு; 'மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதியைப் பெற்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்'; தவெக அமைச்சர் அருண்ராஜ்..!
Minister Arunraj stated that they would maintain a harmonious relationship with the Central Government to secure funds and implement welfare schemes
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை கோரியது. இதனையடுத்து முதலாவதாக காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்தது திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது.
அடுத்ததாக, திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐ.யு.எம்.எல். ஆகியவை நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தன. அதனைத்தொடர்ந்து, தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் தவெக ஆட்சி பொறுப்பேற்று, விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன், செங்கோட்டையன், அருண்ராஜ் உட்பட 09 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

அதன் பிறகு அதிமுக கூட்டனில் பிளவு ஏற்பட்டு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான குழு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் நேரில் சந்தித்தார்.
பின்னர் கடந்த 13-ஆம் தேதி, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு, அதிமுக அதிருப்தி குழு எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தவெக நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையுடன் வென்றது. கடந்த 13-ஆம் தேதியோடு தமிழக சட்டப்பேரவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தவெக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

அதன்படி, தவெக அமைச்சர் அருண்ராஜ் தனது தொகுதியான திருச்செங்கோடுக்கு சென்ற நிலையில், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், கொள்கை ரீதியான மாநில உரிமைகளைச் சார்ந்த முடிவுகளில் தவெக முதல் கட்சியாக குரல் கொடுத்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா என்பது கூட்டாட்சி நாடு. எனவே மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதியைப் பெற்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என்றும் செய்தியாளர்களிடம் அருண்ராஜா தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Arunraj stated that they would maintain a harmonious relationship with the Central Government to secure funds and implement welfare schemes