நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி நாளை தி.க. போராட்டம்; தி.மு.கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள்; ஆர்.எஸ். பாரதி அறிவிப்பு..!
RS Bharathi stated that DMK functionaries will participate in the protest organized by the DK tomorrow demanding the cancellation of the NEET examination
நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் (தி.க.) சார்பில் நாளை (16.5.2026) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கழக நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
''மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் நீட் என்ற தேர்வை ஒன்றிய அரசு திணித்து, அதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் பல நூறு மாணவ, மாணவியர்கள் உயிர்பலி ஆகியுள்ளனர்.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது. கடந்த மே-3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை ஒன்றிய பாஜக அரசே ஏற்றுக் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்துள்ளது.
எனவே, மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திராவிடர் கழகம் 16.05.2026 அன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளதை தி.மு.கழகம் வரவேற்பதோடு, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் திராவிடர் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
RS Bharathi stated that DMK functionaries will participate in the protest organized by the DK tomorrow demanding the cancellation of the NEET examination