மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கிவைத்தார்..! - Seithipunal
Seithipunal


மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஸ்ரீராம் துவ்வூரி, இளைஞர் சேவைகள் இயக்குநர் வினோத் நாயர், சிறப்பு குழந்தைகளுக்கான ஒலிம்பியாட் தலைவர் கார்த்திக் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் நீள ஓட்டப்பந்தய போட்டிகளும், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்ற தடகளப் போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டிகளில் மனவளர்ச்சி குன்றிய 1000 க்கும் அதிகமான சிறப்பு குழந்தைகள் பங்கேற்றனர்.

அமைச்சர் அருண்ராஜ் போட்டிகளில் பங்கேற்ற சிறப்பு குழந்தைகளை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்களை அழைத்து வந்த பெற்றோர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார். “ஒவ்வொரு குழந்தையும் ஒரு சாதனையாளர் தான்” என்ற கருப்பொருளில் இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்த ரோட்டரி சங்கத்திற்கு அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் அருண்ராஜ், வங்கி தேர்வில் வெற்றிபெற்று உதவி மேலாளராக பணிபுரியும் குருபிரசாத் சாமி, மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்ற வி. சீனிவாசன் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற ஏ. சந்தியா ஆகியோரை பாராட்டி கேடயம் வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. நாம் ஒவ்வொரு சிறப்பு குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் திறமைகளை கண்டறிந்து, உரிய ஊக்கமும், பயிற்சியும் அளித்தால் அக்குழந்தைகளாலும் சாதிக்க முடியும்.

இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைய நிகழ்வில் மூளை முடக்குவாதம் (Cerebral palsy) எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு சிறப்பு குழந்தை வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று, உதவி மேலாளராக உயர்ந்துள்ளார்.

இதற்கு முழுமுதற் காரணம் அவரது தாயார். அந்த தாய் மனம் தளராமல் தன் குழந்தைக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கியதன் மூலம் அக்குழந்தை வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று இன்று உதவி மேலாளராக உள்ளார். இது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனை எனக்கு ஒரு விழிப்புணர்வாக இருந்தது. இங்கு வந்துள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பு குழந்தைகள் குறித்து இச்சமூகத்தில் எந்த விதமான பார்வை உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையெல்லாம் கடந்து, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, அக்குழந்தைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து மனம் தளராமல் அனைத்து வசதிகளையும் செய்து தரும் பெற்றோர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை இந்த அரசு மேற்கொள்ளும். இது சிறப்பு குழந்தைகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும். விளையாட்டு ஒன்றுதான் அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை சரியாக பயன்படுத்த உதவும். அவர்களுடைய மனம் இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்து, புத்துணர்வு பெறும். இத்தகைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறப்பு குழந்தைகளுக்கு அரசின் சார்பில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வட்டார அளவிலும் ஒன் ஸ்டாப் சென்டர் (One stop center) அமைத்து, அதன் மூலம் வீடு வீடாக சென்று சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்பகால கண்டுபிடிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இதற்கு ஏதேனும் நிதி தேவைப்பட்டால் அது குறித்து பரிசீலித்து அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், “அதிகாரிகளின் ஆட்சி நடந்தது கடந்த திமுக ஆட்சியில் தான். கடந்த ஆட்சியில் முதல்வருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலும், அவர்கள் சொல்வதைக் கேட்டு மட்டுமே இயங்கிய ஆட்சியாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. குறிப்பிட்ட அந்த நிகழ்வை பொருத்தவரை அரசின் கவனத்திற்கு வராமல் அவர்கள் அது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறது என்று கூறுவது வேடிக்கையானது. உண்மையில் ஒரு நேர்மையான வெளிப்படையான தலைமை இருக்கிறது. இந்த தலைமையின் கீழ் பணியாற்றுவது ஒரு பெரிய வாய்ப்பு என்று அரசு அதிகாரிகள் கருதுகிறார்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, பொதுவாக பேச முடியாது.''என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Arunraaj inaugurated sports competitions for mentally retarded children


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->