"ஸ்டாலின் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டார்" - திமுக கூட்டணியை முறித்த மதிமுக பொதுக்குழுவில் வைகோ ஆதங்கம்!
MDMK Officially Breaks Nine Year Alliance With DMK Vaiko Expresses Anguish
தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், திராவிட முன்னேற்றக் கழக (திமுக) கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டணி முறிவு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைமை தங்களை நடத்திய விதம் குறித்து மிக உருக்கமாகவும் ஆவேசமாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவமதிப்புகளும் ஸ்டாலினின் புறக்கணிப்பும்
செய்தியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய வைகோ, திமுக கூட்டணியை விட்டு வெளியேறியதற்கான பின்னணி காரணங்களை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார். "பாஜக போன்ற மதவாத சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்திற்காகத்தான் கடந்த 9 ஆண்டுகளாகத் திமுகவை ஆதரித்துப் பயணித்தோம். ஆனால், தொகுதிப் பேச்சுவார்த்தையின் போது என்னைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார். அதுமட்டுமன்றி, 'நேரம் கேட்டு இனி எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்றும் முகத்தில் அடித்தாற்போல் கூறினார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நான் ஸ்டாலினை நேரில் சந்தித்தேன். அப்போது என் அருகே சோபாவில் தாராளமாக இடம் இருந்தும், அவர் என் பக்கத்தில் அமராமல் தவிர்த்தார். ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அவர் சீமானிடம் மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு, அவர் என் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை" என்று வைகோ வேதனையுடன் குறிப்பிட்டார்.
மதிமுக பொதுக்குழு தீர்மானமும் குழப்பமும்
தொடர்ந்து பேசிய வைகோ, "ஐயூஎம்எல், விசிக போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்து தற்பொழுது அமைச்சர்களாகியுள்ளனர். நாம் தவெக-வுக்கு அப்போது ஆதரவு அளிக்கவில்லை; அப்படியிருந்தும் எங்களை ஏன் திமுகவினர் தொடர்ந்து கேவலமாகப் பேசினீர்கள்? நாங்கள் என்ன துரோகம் செய்தோம்? கடந்த தேர்தலில் நமது சுயமரியாதையை இழந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். எனவே, இனிமேலும் திமுக கூட்டணியில் தொடரக் கூடாது என்ற தொண்டர்களின் விருப்பப்படி இந்த முறிவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்காலக் கூட்டணி குறித்துத் தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதனிடையே, கூட்டணி முறிவு தீர்மானம் ஒருபுறமிருக்க, நேற்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தை சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்செல்வன் புறக்கணித்துத் திமுகவில் இணைந்தார். இன்று நடைபெற்ற முக்கியப் பொதுக்குழு கூட்டத்தைக் கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரனும் புறக்கணித்துள்ளது மதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி மாறும்போது தங்களது கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்காமல் போனது வைகோவிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
English Summary
MDMK Officially Breaks Nine Year Alliance With DMK Vaiko Expresses Anguish