சீமானுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி: “சொந்த தொகுதியிலேயே டெபாசிட் வாங்காதவர் எங்களை விமர்சிப்பது காமெடி”!
Manickam Thakur response to Seeman It comedy for someone who didnot take a deposit in their own constituency to criticize us
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். சொந்த ஊர் மற்றும் சொந்த தொகுதியில்கூட டெபாசிட் பெற முடியாதவர் காங்கிரஸை விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் சிலர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தொடர்ந்து புலம்பி வருவதாக விமர்சித்தார். அந்த வகையில் சீமானின் சமீபத்திய கருத்துகளும் அதே மனநிலையின் வெளிப்பாடுதான் என்றார்.
மேலும், “காங்கிரஸ் பிச்சை எடுத்து அரசியல் செய்கிறது என்று கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தேசிய கட்சி காங்கிரஸ். பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. நாடாளுமன்றத்தில் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட கட்சியை விமர்சிப்பதற்கு முன், சொந்த தொகுதியில் மக்களின் ஆதரவைப் பெற முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
சீமான் தொடர்ந்து பிற கட்சித் தலைவர்களை விமர்சிப்பதை குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், “நாக்கை அடக்கிப் பேசினால் மரியாதை கிடைக்கும். இல்லையெனில் அரசியல் ரீதியாக பதில் வரும்” என்றார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து அரசியல் பேசுவதாக சீமானை விமர்சித்த அவர், “இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசுபவர்கள் நேரடியாக அங்கு சென்று மக்களின் நிலையைப் பார்ப்பது அவசியம்” என்றும் கூறினார்.
அதேபோல், “2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது உண்மை. ஆனால் பின்னர் கூட்டணிகளின் மூலம் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்றோம். அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானவை. ஒருவரை ஒருவர் அவமதிப்பது சரியான அரசியல் அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் பேசிய சீமான், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையான அரசியல் சக்தியாக செயல்படாமல் கூட்டணிகளின் ஆதரவிலேயே இருப்பதாக விமர்சித்திருந்தார். மேலும், திமுக மற்றும் தற்போது தவெக கூட்டணிகளின் ஆதரவால் மட்டுமே காங்கிரஸ் பதவிகளைப் பெறுகிறது என்றும் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், “ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையை தொடர்ந்து அவமதித்து பேசினால், அரசியல் ரீதியாக பதிலளிக்கத் தயங்கமாட்டோம்” என்று எச்சரித்துள்ளார்.
சீமான் மற்றும் மாணிக்கம் தாகூர் இடையிலான இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Manickam Thakur response to Seeman It comedy for someone who didnot take a deposit in their own constituency to criticize us