மகளிர் உரிமைத் தொகை விவகாரம்: இழுத்தடிப்பதுதான் உங்களின் 'மாற்றமா?' முதலமைச்சர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி
Magalir Urimai Thogai Controversy MK Stalin Questions CM Vijay
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகைத் திட்டம் தொடர்பாகத் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விரைவில் வரவு வைக்கப்படும் என்றும், ஆனால் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குச் சற்று அவகாசம் தேவைப்படுவதாகவும் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழக்கம்போல 15-ஆம் தேதியே பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு மக்கள் நலத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு எதற்காக அரசு கால அவகாசம் கேட்கிறது என்றும், அதில் என்ன விதமான மறுசீரமைப்புகளைச் செய்யப் போகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தடையின்றித் தொடரும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய மு.க. ஸ்டாலின், சொன்ன அடுத்த நாளே இப்படி முரண்பட்ட அறிவிப்பை வெளியிடுவது ஏன் என்று சாடியுள்ளார். குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர் உரிமைத் தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயைக் கூட தராமல் இழுத்தடிப்பதுதான் உங்களின் 'மாற்றமா?' என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
English Summary
Magalir Urimai Thogai Controversy MK Stalin Questions CM Vijay