விஜய் அரசுக்கு 1 வருஷம் டைம் தருவோம்...! ஓராண்டுக்கு அப்புறம் கேள்வி கேட்பேன்...! - நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு
Let give Vijays government 1 year time I will ask questions after year Actor Prakash Raj speech
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும், ஓராண்டுக்குப் பிறகும் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையெனில் நிச்சயம் கேள்வி எழுப்புவேன் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்தது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதன் தலைவரான விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், முதலமைச்சர் விஜய் தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே முதல்-அமைச்சராக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் செயல்பாடுகளை உடனடியாக மதிப்பிடுவதற்கு பதிலாக, அதற்குத் தேவையான காலஅவகாசத்தை வழங்க வேண்டும்.
ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதற்கு முன்பு குறைந்தது ஓராண்டாவது அவர்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.விஜய் குறித்து தனக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், தேர்தலுக்கு முன்பே அதுகுறித்து தான் பேசியுள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் கூறினார்.
இருப்பினும், மக்கள் தேர்தலில் த.வெ.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்று தற்போது 120 நாட்களே ஆகியுள்ள நிலையில், இவ்வளவு குறுகிய காலத்திலேயே அரசின் செயல்பாடுகள் குறித்து எந்தவொரு இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக உடனடியாக அவர்களை விமர்சிப்பது சரியல்ல என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார்.மக்கள் அளித்த வாக்கையும், ஜனநாயகத்தின் தீர்ப்பையும் மதிக்க வேண்டும். அதே நேரத்தில், ஓராண்டுக்குப் பிறகும் அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று கருதும் நிலை ஏற்பட்டால், அப்போது அரசை நோக்கி நிச்சயம் கேள்விகளை எழுப்புவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Let give Vijays government 1 year time I will ask questions after year Actor Prakash Raj speech