அச்சம் வேண்டாம்... ஆனா அலட்சியமும் கூடாது...! - டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் பேச்சு...!
Dont be afraid but dont be indifferent either Minister speech dengue prevention measures
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுமாறு அமைச்சர் அருண்ராஜ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,"தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு 56,863 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளான நிலையில், 2024-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 46,971 ஆகவும், 2025-ம் ஆண்டு 25,585 ஆகவும் குறைந்தது. நடப்பு 2026-ம் ஆண்டில் இதுவரை 17,049 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது.காய்ச்சல் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதுடன், கொசு ஒழிப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.டெங்கு குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளையில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதும் கூடாது.வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்றி, கொசுக்கள் உற்பத்தியாகும் சூழலைத் தடுக்க வேண்டும்.காய்ச்சல் ஏற்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி, உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளை மேலும் கட்டுப்படுத்த முடியும்.தமிழ்நாட்டை காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Dont be afraid but dont be indifferent either Minister speech dengue prevention measures