பேனர் அகற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி...! விழுப்புரத்தில் சோகம்...!
young man electrocuted while trying remove banner Tragedy Villupuram
விழுப்புரத்தில் பிறந்தநாள் விழாவுக்காக பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பேனர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விழுப்புரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சரண் என்பவரது மகனுக்கு தனியார் திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இதையொட்டி கே.கே. சாலை பகுதியில் பிறந்தநாள் பேனர் அமைக்கும் பணியில் சரண் மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மதன்குமார், பூவரசன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட 4 பேர் பேனர் அமைப்பதற்காக அங்கு சென்றனர்.புதிய பேனர் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து புதிய பேனருக்கு வழிவிடும் வகையில் பழைய பேனரை 4 பேரும் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் அகற்றிக் கொண்டிருந்த பேனர் மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது உரசியது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் பேனரில் மின்சாரம் பாய்ந்தது.மின்சாரம் பாய்ந்ததில் பேனரை பிடித்திருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த பயங்கர விபத்தில் மதன்குமார் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.படுகாயமடைந்த பூவரசன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட 3 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு, உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத மின்சார விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young man electrocuted while trying remove banner Tragedy Villupuram