ஊழலில் சிக்கிய கேஎன் நேரு.. மு.க.ஸ்டாலினுக்கு இரண்டே ஆப்ஷன் தான்! ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! அதிர்ச்சியில் திமுக தலைகள்!
KN Nehru caught in corruption MK Stalin has only two options Annamalai started the game DMK leaders in shock
அமைச்சர் கே.என். நேரு மீதான லஞ்ச ஊழல் புகார்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி அமலாக்கத் துறை (ED) மூன்றாவது முறையாக தமிழக காவல்துறை தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையிலும், இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது திமுக ஆட்சியின் நிர்வாக சீரழிவை வெளிப்படுத்துகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, கே.என். நேருவின் சகோதரருக்குச் சொந்தமான நிறுவனத்தில் நடைபெற்ற வங்கி மோசடி விசாரணையின் போது, நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் பணி நியமன ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின. அந்த ஆவணங்களில், 2,538 நியமனங்களில் குறைந்தது 150 பேரிடம் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும், மொத்தமாக ரூ.888 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் கே.என். நேரு மறுத்த நிலையில், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி, வாட்ஸ்அப் உரையாடல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், ஹவாலா பரிவர்த்தனை பதிவுகள், ஒப்பந்த ஆவணங்கள் உள்ளிட்ட பல உறுதியான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை ஏற்கனவே இருமுறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாகவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, திமுக அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பணி நியமனத்திற்கு ரூ.888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க ரூ.1,020 கோடி, தற்போது பணியிட மாற்றங்களுக்கு லஞ்சம் வாங்கிய விவகாரம் என தொடர்ச்சியாக ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவை அனைத்தும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவின் காலத்தில் நடந்தவை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை உள்ளதாகவும், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக மட்டும் ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு அதிகாரிகள் பலர் ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இரண்டு விளக்கங்கள் மட்டுமே இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஒன்று, தனது ஆட்சியில் நடைபெறும் பெரும் ஊழல்களை அறிந்தும் அறியாமல்போல் இருப்பது; அல்லது, இந்த ஊழல்களில் அவர் முழுமையாக உடந்தையாக இருப்பது. “உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் கே.என். நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடாதது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதற்கான வெளிப்படை சாட்சி” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
KN Nehru caught in corruption MK Stalin has only two options Annamalai started the game DMK leaders in shock