தவெக அலுவலகத்தில் விசாரணையை தொடங்கிய சிபிஐ!
Karur stampede CBI investigation tvk office
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக கட்சியின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில், தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, விரிவான விசாரணை தொடங்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழு, கடந்த அக்டோபர் 17 முதல் சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதில், ஒரு குழு கரூரில் சம்பவம் நடைபெற்ற இடத்தையும் அப்பகுதி மக்களையும் விசாரித்து வருகிறது.
அதே நேரத்தில், மற்றொரு குழு இன்று சென்னை பனையூரில் அமைந்த தவெக கட்சி அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், நிகழ்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்ததா, கூட்ட நெரிசலைத் தவிர்க்க முயற்சி எடுக்கப்பட்டதா, அலட்சியம் நடந்ததா என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கரூர் நெரிசல் பலி வழக்கில் தவெக தலைவர் விஜயிடம் கூட சிபிஐ விசாரணை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Karur stampede CBI investigation tvk office