73 வயது பெண் விவசாயிடம் மன்னிப்பு கோரிய பாஜக எம்பி கங்கனா!
kangana apology to farmer
பெண் விவசாயியை குறைத்து பேசும் வகையில் அவதூறு கருத்து தெரிவித்ததாக இருந்த வழக்கில், பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டார்.
2020-2021ல் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தியது நினைவில் உள்ளது. அப்போது 73 வயது பெண் விவசாயி மஹிந்தர் கெளர் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்த சமயத்தில், கங்கனா தனது சமூக ஊடகப் பக்கத்தில் “இத்தகைய பெண்கள் ரூ.100க்கே போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்” என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து தனது மரியாதையை குலைத்ததாகக் கூறி மஹிந்தர் கெளர் பதிண்டா நீதிமன்றத்தில் கங்கனாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா பஞ்சாப் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் இரு நீதிமன்றங்களும் அதை நிராகரித்தன.
இதனைத் தொடர்ந்து, பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் கங்கனா நேரில் ஆஜராகாததால், கடந்த மாதம் பதிண்டா நீதிமன்றம் அக்டோபர் 27ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
அதன்படி நேற்று கங்கனா நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அப்போது, “அந்த பதிவை நான் எழுதவில்லை, ரீட்வீட் செய்தேன். ஆனால் அதனால் யாராவது மன உளைச்சலுக்கு ஆளானிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்றம் கங்கனாவுக்கு ஜாமீன் வழங்கி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
English Summary
kangana apology to farmer