''ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்''; முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்துக்கு கமல்ஹாசன் வரவேற்பு..!
Kamal Haasan welcomes the Singappen Special task force initiative launched by Chief Minister Vijay
கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் தவெக தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியின் படி, பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதனைத்தொடர்ந்து, இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kamal Haasan welcomes the Singappen Special task force initiative launched by Chief Minister Vijay