படம் நின்றதால் அல்ல… உச்சத்தில் இருந்தபோதே அரசியலுக்கு வந்தவர் விஜய்...! - புஸ்சி ஆனந்த் பதில்
It wasnt because film discontinued Vijay entered politics while he at peak bussy Anand reply
தவெக கடலூர் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சியின் நிலைப்பாடுகளையும் எதிர்கால அரசியல் இலக்குகளையும் வலியுறுத்தி பேசினார்.

அவர் உரையாற்றுகையில், தலைவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமான மாவட்டம் கடலூர் என்றும், தானே புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் நேரடியாக மக்களுக்கு உதவியவர் என்றும் நினைவுபடுத்தினார்.
கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எங்கள் கட்சியின் அடிப்படை உண்மை மற்றும் உழைப்பே என்றும், உச்ச நிலையில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்தவர் விஜய்; ஓய்வு பெற்ற பிறகு அரசியலுக்கு வந்தவர் அல்ல என்றும் கூறினார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி மக்கள் நலத்தில் பலன் அளிக்கவில்லை; மக்களின் வரிப்பணத்தை சரியாக பயன்படுத்தத் தவறிய நிர்வாகமாகவே செயல்பட்டு வருகிறது என கடுமையாக விமர்சித்தார்.
எந்த வேஷம் போட்டாலும் தமிழ்நாட்டில் ஒரே ‘தளபதி’ விஜய்தான் என்றும், கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளும் த.வெ.க.வின் கோட்டையாக மாறும் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி வழங்குவோம் என்றும் உறுதியளித்தார்.
கட்சியின் ‘விசில்’ சின்னத்தை வீடு தோறும் கொண்டு சேர்க்க தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்க்கு இந்த சட்டசபை கடைசியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், சமூக நீதி பேசும் தி.மு.க. இதுவரை அதை நடைமுறைப்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார். விஜய் முதல்வராக வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. கூட்டணி பல கட்சிகளை சேர்த்து செயற்கையாக நிலைத்து நிற்கிறது; ஆனால் த.வெ.க. தனித்துவமான சக்தியாக எழுந்து நிற்கிறது என்றும் தெரிவித்தார்.
வரலாற்றில் தி.மு.க. இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக ஆட்சிக்கு வராததை சுட்டிக்காட்டி, இம்முறை மாற்றம் நிச்சயம் என்றார்.நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உரையாற்றுகையில், 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு பிறகு தன்னை மீண்டும் களமிறக்கியது விஜய்தான் என்றும், எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது மக்கள் தலைவர் விஜயாக உருவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியை மாற்ற வல்ல ஒரே சக்தி த.வெ.க. தான்; 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என உறுதியாகக் தெரிவித்தார்.
English Summary
It wasnt because film discontinued Vijay entered politics while he at peak bussy Anand reply