தவெக – காங்கிரஸ் கூட்டணி கனவா? தவெகவினர் நம்புறது நடக்காதாமே! விஜய் மட்டும்தான் விசில் ஊதணுமா? - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த பாதையை தேர்வு செய்யப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்ற நம்பிக்கை தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் இன்னும் நிலவி வருகிறது. ஆனால் அரசியல் நிலவரங்களை நன்கு அறிந்தவர்கள், அந்த நம்பிக்கை நடைமுறையில் சாத்தியமில்லை என உறுதியாகக் கூறுகின்றனர்.

விஜய் தனது விருத்தாசலம் மாநாட்டில் “ஆட்சியில் பங்கு” குறித்து பேசிய தருணத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அதன்பின், காங்கிரஸின் சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என வெளிப்படையாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் தொடரும் கூட்டணியே கட்சிக்கு பாதுகாப்பானது என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த இரு வேறுபட்ட அணுகுமுறைகளே காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தின.

இந்த சூழலில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டார். கேரளாவில் இடதுசாரிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்பட்டதை முன்மாதிரியாகக் காட்டியும் அவர் கருத்து தெரிவித்தார். அதுபோல், ராகுல் காந்திக்கு நெருக்கமான அரசியல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்ததும், பின்னர் தமிழக அரசை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிட்டு விமர்சித்ததும் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தவெகக்கு “விசில்” சின்னம் ஒதுக்கப்பட்டபோது, “தமிழக தேர்தலில் விசில் ஊதப்பட்டுவிட்டது” என காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்த ட்வீட்களும் திமுக தலைமையை கடும் அதிருப்திக்குள்ளாக்கின. இதன் விளைவாக, கூட்டணி உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், சில நிர்வாகிகள் அதையும் மீறி தவெக–காங்கிரஸ் கூட்டணி குறித்து தொடர்ந்து பேசிவந்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இனி கூட்டணி விவகாரம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகும், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸில் ஒரு பிரிவுக்கு விருப்பம் இருப்பதாக கூறியது, தவெக ஆதரவாளர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆனால் அரசியல் யதார்த்தம் வேறுபட்டதாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோர், தவெகவுடன் கூட்டணி அமைப்பது கட்சிக்கு அரசியல் தற்கொலைக்கு சமம் என கருதுவதாகவும், அதனால் திமுக கூட்டணியை விட்டுச் செல்ல கட்சி தலைமை தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தவெக–காங்கிரஸ் கூட்டணி என்பது பேச்சளவில் மட்டுமே இருக்கும் ஒன்றாகவே அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இதன் அடிப்படையில், விஜய் முன் இருக்கும் அரசியல் ஆப்ஷன்கள் இரண்டு மட்டுமே என்றே சொல்லப்படுகிறது. ஒன்று, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது. மற்றொன்று, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவது. ஆனால், “விஜய்தான் முதல்வர் வேட்பாளர்” என்ற நிலைப்பாட்டில் இருக்கும் தவெக, அதிமுக கூட்டணியில் இணைவது சாத்தியமற்றதாகவே பார்க்கப்படுகிறது. அதனால், விஜய் தனித்து களம் காண்பதே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதற்குச் சான்றாக, தவெக நிர்வாகிகள் தொடர்ந்து “234, 234” என்று பேசிவருவதும் குறிப்பிடத்தக்கது. கூட்டணிகளை நம்பாமல், தனியாக களம் இறங்கி, விசில் சத்தத்துடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க விஜய் தயாராகிவிட்டார் என்றே தற்போதைய சூழல் உணர்த்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the Tvk Congress alliance a dream The Tvk hopes will not come true Is Vijay the only one who will blow the whistle


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->