மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் முழுமையாக வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை: தவெக அரசுடன் இணக்கமான போக்கைத் தொடங்கிய ஆளுநர் அர்லேகர்!
Governors Address Read Fully After Three Years Arlekar Signals Harmonic Start with New TVK Government
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்று, மே 13 அன்று 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
முன்னதாக அமைச்சர்கள் பதவியேற்பின் போது வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டுத் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக முதல்வர் விஜய் தில்லி சென்று பிரதமரிடம் விலக்கு கோரியிருந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் மாநில மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து இரண்டாவதாகத் தேசிய கீதமும் பாடப்பட்டது. இந்த இணக்கமான சூழலைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்லேகர் தனது உரையைத் தொடங்கினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின், தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த கொள்கை விளக்க உரையை ஆளுநர் ஒருவர் எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக வாசிப்பது இதுவே முதன்முறையாகும். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி பெரியார், அம்பேத்கர், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தது மற்றும் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை எனக் கூறி 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது போன்ற கசப்பான சம்பவங்கள் அரங்கேறின. ஆனால், இன்றைய கூட்டத்தொடரில் புதிய ஆளுநர் ஆர்லேகர், மத்திய அரசுக்கு எதிரான மிகக் கடுமையான விமர்சனங்கள் அடங்கிய வரிகளையும் உள்ளதை உள்ளபடியே வாசித்தார்.
குறிப்பாக, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிப் பகிர்வை மத்திய அரசிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பெற உச்ச நீதிமன்றம் வரை செல்ல சட்ட வல்லுநர்கள் குழு அமைக்கப்படும் என்ற வரிகளையும், மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வாசித்தார். மேலும், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையையே அரசு தொடர்ந்து பின்பற்றும் என்றும், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐக் கடுமையாக எதிர்ப்பதோடு, நிதி ஒதுக்கீட்டைத் தடுத்து மும்மொழிக் கொள்கையைத் திணிக்கப் பார்க்கும் மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். நீட் தேர்வு, கல்விக் கொள்கை திணிப்பு போன்ற சிக்கல்களைத் தீர்க்கக் கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தவெக அரசு மேற்கொள்ளும் என்ற வரிகளையும் அவர் மாற்றமின்றி வாசித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் உரையைச் சுட்டிக்காட்டித் தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் அர்லேகர், சுமார் 36 நிமிடங்கள் உரையாற்றி, இறுதியில் திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளுடன் நிறைவு செய்தார். ஆளுநருக்காகத் தமிழக அரசு தேசிய கீதத்தை இரண்டாவதாக இசைத்ததும், அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசித்ததும் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய இணக்கமான போக்கைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Governors Address Read Fully After Three Years Arlekar Signals Harmonic Start with New TVK Government