மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை.!!
gk vasan statement on mar 27
மத்திய, மாநில அரசுகள் பஞ்சு விலையை உடனடியாகக் குறைக்கவும், உயர்த்தப்படாமல் இருக்கவும், நூற்பாலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் உதவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மாநில அரசுகள் பஞ்சு விலையைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு கேண்டி பஞ்சு விலை 43 ஆயிரம் ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் இதன் விலை 78 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை 11 ஆயிரம் உயர்த்தப்பட்டு 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இப்படி பஞ்சு விலை உயர்த்தப்பட்டதால் பஞ்சை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயருகிறது. இதனால் பஞ்சை பயன்படுத்தி நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. குறிப்பாக ஒரு லோடு 150 பேல் பஞ்சுக்கு 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், ஆனால் தற்போது 63 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். முதலீடு அதிகம், உற்பத்தி குறைவு, நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில் தரம் குறைந்த பஞ்சை பயன்படுத்தினால் உற்பத்தியின் தரமும் பாதிக்கப்பட்டு, தேக்கமுற்று, செலவும் அதிகமாகும். பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளை இயக்கும் உரிமையாளர்கள் மற்றும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுவோர் என இலட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை தொடர முடியாது.
இருப்பினும் நூற்பாலைகளை இயக்கும் உரிமையாளர்கள் பொருளாதாரத்தில் சிரமப்பட்டு, உற்பத்தி செய்தாலும், உற்பத்தி செய்த பொருட்களின் விலையை உயர்த்த நேரிடுவதால் அவற்றை விற்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் நூற்பாலைகளில் வழக்கமாக நடைபெறும் உற்பத்தி பாதியளவிற்கு குறைந்து விட்டது. இது தொடர்ந்தால் நூற்பாலைகளை இயக்க முடியாமல், தொழிலை இழந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பஞ்சு விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஞ்சு விலையைக் கட்டுக்குள் வைத்து, நூற்பாலைகளின் உற்பத்திக்கு ஊக்கமளிக்க உதவிட வேண்டும். எனவே பஞ்சு விலை, நூற்பாலை உற்பத்தி தொடர்பாக உரிமையாளர்கள் மற்றும் நூற்பாலை உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
gk vasan statement on mar 27