ஜிகே வாசனின் பொங்கல் வாழ்த்து!
GK Vasan pongal wishes
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியானது, "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று (14.01.2021) தை பிறந்து இனி தமிழக மக்கள் அனைவரும் நலமுடன், வளமுடன், மகிழ்வுடன் வாழ பொங்கல் திருநாள் வழி வகுக்கும்.
கடந்த 10 மாத காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு இன்னல்களுக்கும், துன்பத்துக்கும் உட்பட்ட மக்களும் கொரோனா அச்சத்தில் இருந்து மீளவும், துன்பத்தில் இருந்து விடுபடவும் இப்பொங்கல் தமிழக மக்களுக்கு நல்வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.
அந்த வகையில் நாட்டு மக்கள் கொரோனாவின் அச்சத்தில் இருந்து மீள, கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் சிறக்க கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 16 ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த தொடங்கப்படுகிறது.
இதன் மூலம் நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இனி தமிழகத்தில் விவசாயம் மேலும் செழிக்க, தொழிலாளர்கள் முன்னேற, ஏழை, எளிய, நடுத்தர மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் கல்வி சிறக்க – அனைத்து தரப்பு மக்களும் மீண்டும் கடின உழைப்பை மேற்கொள்வோம், பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். மேலும் மத்திய மாநில அரசுகளின் உயரிய பணிகள் தொடர, திட்டங்களுக்கு துணை நிற்போம்.
குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சி தொடர்ந்திட, தமிழர் தம் வாழ்வு மேம்பட வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்துவோம்.
எனவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைத்து, இன்புற்று, மகிழ்வோடு வாழவும், தை பிறந்து வழி பிறக்கவும், தமிழர்கள் நல்வாழ்க்கை வாழவும் இறைவன் துணை நிற்க வேண்டி த.மா.கா சார்பில் அனைவருக்கும் பொங்கல் திருநாள் ல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.