லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு...! வழக்குப்பதிவில் சிக்கிய 11 பேர்...! நடந்தது என்ன...?
Former Minister EV Velu net Anti Corruption Department 11 people caught case What happened
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவைச் சுற்றி புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள எ.வ.வேலுவின் இல்லம் உள்ளிட்ட மொத்தம் 13 இடங்களில் சுமார் 35 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனுடன், தென்மாத்தூரில் உள்ள அவருக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களிலும் அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் திண்டுக்கல்லில் எ.வ.வேலுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பொறியாளர் ஒருவரின் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பொறியாளர் கண்ணன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2006 முதல் 2011 வரை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக எ.வ.வேலு மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது விரிவான சோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் மற்றும் சொத்து விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரங்களும் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரபரப்பான சூழலில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Former Minister EV Velu net Anti Corruption Department 11 people caught case What happened