கடைசி நாள் பரபரப்பு உச்சம்...! வேட்புமனு தாக்கலில் திரண்ட தலைவர்கள்...! - தேர்தல் களம் சூடு அதிகரிப்பு
excitement at its peak last day Leaders gathered file nominations Election heat increases
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை நோக்கி கட்சிகள் அனைத்தும் முழு வேகத்தில் களமிறங்கியுள்ளன. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. ஆகிய நான்கு அணிகளுக்கிடையே கடும் போட்டி உருவாகி, தேர்தல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வர, அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்துள்ளது.

முதல்நாளிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து தேர்தல் களத்தை சூடுபடுத்தினர்.கடைசி நாளான இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (விருத்தாசலம்), தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர்) உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனுடன் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பல்வேறு வேட்பாளர்களும் இறுதிநேரத்தில் தங்கள் மனுக்களை பதிவு செய்துள்ளனர்.சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 8வது முறையாக களம் காணும் வகையில் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த பல தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவம் அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தனது மனுவை தாக்கல் செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார்.மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன், அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மதுரை தெற்கில் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் களத்தில் தங்கள் இருப்பை பதிவு செய்துள்ளனர்.
மேலும் பல்வேறு தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தனர்.இன்று கடைசி நாள் என்பதால், தேர்தல் அலுவலகங்களில் பெரும் திரளான கூட்டம் காணப்பட்டு பரபரப்பு நிலவியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ‘டோக்கன்’ முறையும் அமல்படுத்தப்பட்டது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படவுள்ளன. உரிய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், போட்டியிலிருந்து விலக விரும்புவோர் 9ஆம் தேதி வரை தங்கள் மனுக்களை திரும்ப பெற முடியும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் களம் மேலும் தீவிரமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
excitement at its peak last day Leaders gathered file nominations Election heat increases