அப்போ ஒரு பேச்சு; இப்போ ஒரு பேச்சு! ஆசிரியர்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
eps condemns for teachers arrest in chennai
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், புதிய பணி நியமனத்திற்கு தேர்வு நடத்தக்கூடாது என டெட் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும் போராடி வந்தனர். இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படத்தத்தால் ஆசிரியர் சங்கங்கள் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்தன.
தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசு முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஆசிரியர்கள் உறுதிபட தெரிவித்தனர். இந்நிலையில் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 3 சங்கங்களையும் சேர்ந்த ஆசிரியர்களை காவல்துறையினர் இன்று வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களே,பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைது செய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன். 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்" என தனது கண்டனதை பதிவிட்டுள்ளார்.
English Summary
eps condemns for teachers arrest in chennai