தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி..!
Edappadi Palaniswami offered prayers at the Siluvampalayam Murugan temple during the Thaipusam festival
தைப்பூச திருவிழா இன்று நாடு முழுவதும் உள்ள முருக பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த தைப்பூசத் திருநாளையொட்டி, அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தைப்பூச திருநாளை ஒட்டி இக்கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தன.
எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை ஒட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது நிலையில்,எடப்பாடி பழனிசாமி மக்களோடு மக்களாக அமர்ந்து அன்னதானம் உண்டு மகிழ்ந்தார். பின்னர், மக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
''தைப்பூசத் திருநாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 1), சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த தமது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜையில், கிராம மக்களுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக தைப்பூசத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
''இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள். அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால், "வேலுண்டு வினையில்லை" என்பதற்கு ஏற்ப வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் , இந்த தைப்பூசம் திருநாள்.
வேல் ஏந்தி தீமைகளை அகற்றி, அன்பும் கருணையும் அருளும் முருகப் பெருமானின் பூரண அருளால், உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாழ்வு மலரட்டும். வெற்றிகள் தொடரட்டும். தீமையின் பிடியில் இருந்து தமிழகம் மீளட்டும். கந்தனின் அருளால், தமிழ்நாடு உயர்ந்து ஒளிரட்டும். தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எனது தலைமையிலான, அதிமுக அரசு அறிவித்தமையை உள்ளார்ந்த பெருமிதத்தோடு நினைவுகூர்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami offered prayers at the Siluvampalayam Murugan temple during the Thaipusam festival