டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி; தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு..!
Edappadi Palaniswami meets Amit Shah in Delhi on seat sharing
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி வருகிறது. இதற்கான தேதி இந்த 10 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் முக்கியமாக கள பணியில் ஈடுபட்டுள்ளன. அதிலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சிஆகிய 04 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அதேப்போல நேற்று முன்தினம் 02-வது முறையாக பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 09.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார்.
கடந்த முறை எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்த நிலையில், இந்த முறையும் அவர் சென்றுள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து சுமார் 02 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறபட்டு சென்றுள்ளார். இதன் ஆலோசனையின் போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வருகிற 07-ந்தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அடுத்ததாக, வருகிற 11-ந்தேதி அவர் திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்யவுள்ளார். ஆகையால், பிரதமர் 07-ந்தேதி தமிழகம் வருவதற்கு முன்பு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Edappadi Palaniswami meets Amit Shah in Delhi on seat sharing