உ.பி-யில் சோகம்; பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்த 07 வயது சிறுமி; சக்கரத்தில் சிக்கி பலி; ஓட்டுநர் கைது..!
7 year old girl dies after falling through hole in school bus in UP
பள்ளிப் பேருந்தின் தளம் உடைத்து ஓட்டை வழியாக கீழே விழுந்து 07 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. தனியார் பள்ளியில் பயின்று வந்த சிறுமி அனன்யாவும் அவரது அண்ணன் (10) யாஜத்தும் கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 03 மணியளவில் மற்ற மாணவர்களுடன் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளனர் .
அவர்கள் வந்த பள்ளி பேருந்து பிர்ஹார் கிராமம் அருகே சென்றபோது, அனன்யா அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே இருந்த பேருந்தின் தளம் திடீரென உடைந்துள்ளது.
அப்போது இருக்கைக்குக் கீழே ஏற்பட்ட பெரிய ஓட்டை வழியாக அனன்யா ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அவரது அண்ணன் கூச்சலிட்டும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்குள் பின்சக்கரம் சிறுமியின் மீது ஏறியுள்ளது.
அந்தப் பேருந்து மிகவும் பழையதாகவும், துருப்பிடித்த நிலையிலும் இருந்துள்ள நிலையில், அனன்யா அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே ஏற்கெனவே ஒரு பெரிய ஓட்டை இருந்துள்ளது. இந்த பேருந்தில் தினமும் சுமார் 40 குழந்தைகளை அந்தப் பள்ளி நிர்வாகம் ஏற்றிச் சென்றுள்ளது.
இந்த விபத்துக்குக் காரணமான பேருந்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கியுள்ளதோடு, பேருந்து ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
பள்ளி சிறுமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு மக்கள் சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
English Summary
7 year old girl dies after falling through hole in school bus in UP