வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு: மூடல் அறிக்கையை திரும்பப் பெற நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மனு!
DVAC Seeks to Reopen 28 Crore Corruption Case Against Vaithilingam Court Sets Hearing for June 29
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக பிரமுகருமான வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ. 28 கோடி லஞ்ச வழக்கில் தமிழக சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக முந்தைய ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 'வழக்கு மூடல் அறிக்கையை' (Closure Report) திரும்பப் பெற அனுமதி கோரி, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
வழக்கின் பின்னணியும் புகாரும்
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக வைத்திலிங்கம் பதவி வகித்தார். அப்போது, சென்னை பெருங்களத்தூரில் உள்ள 'ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்குவதற்காக, அவர் ரூ. 28 கோடி லஞ்சம் பெற்றதாக 'அறப்போர் இயக்கம்' சார்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் விரிவான புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2024 செப்டம்பரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் (ED) தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்குகள் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தன.
அரசியல் மாற்றமும் யு-டர்ன் எடுத்த லஞ்ச ஒழிப்புத் துறையும்
கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திடீரென திமுகவில் இணைந்தார். அவர் இணைந்ததைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை அவசர அவசரமாக முடித்து வைப்பதாக முந்தைய ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு அறப்போர் இயக்கமும் அமலாக்கத் துறையும் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
ஆட்சி மாற்றத்தின் விளைவு: தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை தனது முந்தைய முடிவிலிருந்து முற்றிலும் பின்வாங்கியுள்ளது. வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் புகாரை மீண்டும் விரிவாக விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதால், முந்தைய மூடல் அறிக்கையைத் திரும்பப் பெற தற்பொழுது நீதிமன்றத்தின் அனுமதியை நாடியுள்ளது.
நீதிமன்றத்தின் தற்போதைய நிலைப்பாடு
இந்த மனுக்கள் அனைத்தும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது வைத்திலிங்கம் தரப்பில், இந்த விவகாரத்தில் தலையிட அமலாக்கத் துறைக்கு எந்த சட்டப்படியான முகாந்திரமும் இல்லை என வாதாடப்பட்டது. அறப்போர் இயக்கம் சார்பில், வழக்கு மூடல் அறிக்கையின் நகலைத் தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மூடல் அறிக்கைக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததா (Maintainable) என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் எனக் கூறி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
English Summary
DVAC Seeks to Reopen 28 Crore Corruption Case Against Vaithilingam Court Sets Hearing for June 29