'காவிரி உரிமையை அடகு வைக்காதீங்க'...! - மத்திய அரசின் பதிலால் கொதித்த உதயநிதி ஸ்டாலின்... அரசுக்கு எச்சரிக்கை...!
Dont pawn Cauvery rights Udhayanidhi Stalin angered by central government response warns government
மேகதாது அணை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி, தமிழகத்தின் நீர்வள உரிமையை பாதுகாக்க மாநில அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவையில்லை" என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில், காவிரி நதி நீர் உரிமை தொடர்பான தமிழகத்தின் சட்டப்பூர்வ நிலைப்பாட்டையே கேள்விக்குறியாக்குவதாக விமர்சித்துள்ளார்.

மேலும், டெல்லி தலைமையுடன் மோதலை தவிர்க்கும் அரசியல் அணுகுமுறையும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கத் தயங்கும் நிலைப்பாடும் காரணமாக, தமிழகத்தின் நீர்வள உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சட்டப்பேரவையிலேயே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒரே அணியாக இணைந்து, மத்திய அரசிடம் தமிழகத்தின் எதிர்ப்பை வலிமையாக பதிவு செய்ய வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கர்நாடகாவில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக, "ஷோபா மாடல் முதல்வர்" என விமர்சித்த அவர், எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும், காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளையும் அரசு பொருட்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் காலதாமதம் ஏற்பட்டால், காவிரி நீரை நம்பி வாழும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, மேகதாது அணை கட்டும் முயற்சியை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முறியடிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது பதிவின் மூலம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dont pawn Cauvery rights Udhayanidhi Stalin angered by central government response warns government